தொடரும் பயங்கரவாதிகளின் மர்ம மரணங்கள்! புல்வாமா தாக்குதல் நடத்திய முக்கிய நபர் சுட்டுக்கொலை!
புல்வாமா தாக்குதல் நடத்திய முக்கிய பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...
புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் ஹம்சா புர்ஹான் எனும் பயங்கரவாதி மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா மாவட்டத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையின் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு, புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்சா புர்ஹான் (எ) அர்ஜுமந்த் குல்சார் தார், வெடிபொருள்கள் விநியோகித்தாகவும், கடந்த 2020 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து அவர் கையெறி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ஹம்சா புர்ஹான் பயங்கரவாதி என மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டார். இதனால், இந்தியாவில் இருந்து தப்பிய அவர் பாகிஸ்தானில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராகக் கருதப்படும் ஹம்சா புர்ஹான் முசாஃபராபாத் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக, இந்திய உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வரும் லஷ்கர்-இ-தெய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.