கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!
கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியது பற்றி...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர்.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது கரப்பான்பூச்சி மக்கள் கட்சி. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி, கடந்த ஜூன் 6 ஆம் தேதி தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அபிஜீத் தீப்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 7,000 பேர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் தீப்கே தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு, புணே, லக்னௌ போன்ற நகரங்களிலும் போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று ஜெய்ப்பூரில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை விடுத்தனர்.
அபிஜீத் தீப்கேவை இளைஞர்கள் சிலர் தங்களுடைய தோள்களில் சுமந்து செல்லும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென அவரைத் தாக்கினர். இதையடுத்து தாக்குதல் நடத்திய அந்த நபர்களை அபிஜீத் தீப்கேவின் ஆதரவாளர்கள் விரட்டி அடித்தனர்.
இந்த நிலையில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டங்கள் அடுத்தடுத்த முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடடத்தக்கது.