முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்
கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே. சுரேஷ் தெரிவித்தது குறித்து...
பெங்களூரு: கர்நாடகத்தில் முதல்வர் மாற்றம் குறித்த தொடர் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூவில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முதல்வா் மாற்றம் குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் அல்ல. அந்த விவகாரம் குறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடா்பாக கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம். கட்சி தலைமையின் அறிவுரைப்படி நடப்போம்.
Advertisement
நானும், எனது சகோதரா் துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் அடிக்கடி தில்லி சென்று வருகிறோம். எனவே, நாங்கள் தில்லி சென்று வந்ததற்கு அா்த்தம் கற்பிக்கக்கூடாது. "நான் எப்போதாவது அரிதாக தில்லி சென்றால் மட்டுமே, நீங்கள் என்னிடம் அதற்கான காரணத்தைக் கேட்க வேண்டும். இப்படி கேள்விக் கேட்பதால், மாதத்துக்கு ஒன்று அல்லது இருமுறை மட்டும் தில்லி செல்கிறோம் என்று அவர் கூறினார்.
சமீபத்திய தில்லி பயணத்தின்போது தங்களுக்கு நல்ல செய்தி எதுவும் கிடைத்ததா? என்று கேட்கிறீா்கள். தில்லிக்கு செல்லும்போதெல்லாம் நல்ல செய்தி கிடைப்பதாக அவர் பதிலளித்தார். சில நேரங்களில் கட்சிப்பணிக்காகவும், சில நேரங்களில் சொந்த பணிகளுக்காகவும் தில்லி செல்கிறோம். இன்னும் சில நேரங்களில் அரசு சார்ந்த பணிகளுக்காகவும் தில்லி செல்கிறோம். எனவே, தில்லி செல்வதற்கு சிறப்பு காரணங்கள் எதுவும் இல்லை என்றாா் அவா்.
சமீபத்திய தில்லி பயணத்தின்போது, கட்சித் தலைமையிடம் முதல்வர் மாற்றம் குறித்து நானோ அல்லது எனது சகோதரரோ எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
காங்கிரஸ் கட்சி வட்டாரங்களின் தகவலின்படி, மாநிலத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி தற்போது தீவிரமடைந்துள்ளது.
ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கட்சியில் ஏதோ ஒரு பெரிய மாற்றம் இருக்கக்கூடும் என்று காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.