நாங்குநேரி: ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொன்னவர்களின் சாயம் தற்போது வெளுத்து வரும் நிலையில், அவர்கள் திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல கட்சி தொடங்குகிறார்கள் என்று சசிகலாவை விமர்சித்தார் டி.டி.வி. தினகரன்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் களம் காண்போம் அம்மாவின் ஆட்சிமை அமைப்போம் என்ற பெயரில் சசிகலா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டில், மக்கள் நலனுக்காக புதிய கட்சியை அறிவிக்கிறேன். எனது புதிய கட்சி அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் திராவிடக் கட்சியாக இருக்கும். அந்தக் கட்சியின் மூலம் ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம். கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன். என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை. களம் காண்போம். நம் தலைவர்களின் பொற்கால ஆட்சியை அமைப்போம் எனக் குறிப்பிட்டு கொடியை அறிமுகம் செய்தார்.
இந்த நிலையில், திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல சிலர் கட்சி தொடங்குகிறார்கள் என்று சசிகலாவை விமர்சனம் செய்த டி.டி.வி. தினகரன், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொன்னவர்களின் சாயம் தற்போது வெளுத்து வருகிறது என்றார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரிக்கு புதன்கிழமை வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் 99.9% பேர் அமமுகவிலும், அதிமுகவிலும் உள்ளனர். ஓரணியில் நாங்கள் இருக்கிறோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆனால், சிலர் திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொன்னவர்களின் சாயம் இப்போது வெளுத்து வருகிறது. 35 ஆண்டு காலம் எனக்கு மட்டுமே தெரிந்த சிலரது உண்மை நிலை, இன்று தமிழக மக்களுக்கும் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது. புதிய கட்சிகளால் எங்களுக்கு பாதிப்பு இல்லை என்றார்.
மேலும், சசிகலாவுக்கு 1 சதவீத வாக்குகள் கூட இல்லை என்றவர், நெல்மணிகள் நிறைந்த தோட்டத்தில் ஒரு சில நெல்மணிகளை வேண்டுமானால் காகம், குருவிகள் கொத்திச் செல்லலாம். அதனால் தோட்டத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஜெயலலிதா ஆட்சியை தடுத்து நிறுத்த நினைப்பவர்களை, நீங்கள் நெல்மணிகளாக நினைக்கலாம். ஆனால், அவை பதறுகளாக கூட இருக்கலாம் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.