பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலைகளை அதிகரித்தது ஏன்?
மத்திய கிழக்கில் போா் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு உள்நாட்டு எரிபொருள் விலைகளை திருத்த வேண்டிய கட்டாயம் குறித்து...
மத்திய கிழக்கில் போா் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு உள்நாட்டு எரிபொருள் விலைகளை திருத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி கடந்த சனிக்கிழமை(பிப்.28) ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை தொடங்கின. இதையடுத்து அண்டை நாடுகளான ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை தங்களின் விமானப் போக்குவரத்துக்கான வான்வெளிகளை மூடியது.
அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவரான ஷியா இஸ்லாமிய பிரிவு மதகுரு அயதுல்லா அலி கமேனி (86), அந்நாட்டு அமைச்சா்கள் உள்பட பலா் கொல்லப்பட்டனா். இதையடுத்து, இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்தது.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள், எண்ணெய்க் கிணறுகள், முக்கிய நகரங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரான் படைகள் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஒருபுறம் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானில் தலைநகா் டெஹ்ரான் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்டவற்றைக் குறிவைத்து தாக்கி வருகின்றன.
ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் இறங்கியுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பினா் இஸ்ரேலைக் குறிவைத்து தாக்குதல் தொடுத்துள்ளனா்.
இதனிடடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதால், வளைகுடா நாடுகளிடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
பாகிஸ்தானில் அதிரடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கடந்த இரண்டு நாட்களாக மேற்கு ஆசியாவில் மோதல்கள் வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், உலக எரிசக்தி மற்றும் எரிப்பொருள்கள் விநியோகத்தை சீர்குலைப்பதால் சர்வதேச எண்ணெய் விலை ஒரே வாரத்தில் சுமார் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் உள்நாட்டு எரிபொருள் விலைகளை திருத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வால் கடும் பொருளாதார சிக்கலில் உள்ள பாகிஸ்தான், எரிப்பொருள்கள் மீதான விலையை கடுமையாக உயர்த்துவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அதன்படி, வரலாறு காணாத வகையில், ஒரே இரவில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.55 உயர்ந்து, பெட்ரோல் ரூ. 321.17-க்கும், டீசல் ரூ.335.86-க்கும் விற்பனையாகிறது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம்
கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானை உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துமாறு சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) கேட்டுக் கொண்டதால் எரிப்பொருள்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே, பல வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் பெட்ரோல், டீசல் எரிபொருள்களை நிரப்புவதற்காக பெட்ரோல் நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். லாகூர் மற்றும் கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் இந்த நிலை காணப்பட்டது.
கடும் நடவடிக்கை
இதனிடையே, எரிபொருளை பதுக்கி வைப்பதற்கு எதிராக வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப், செயற்கை பெட்ரோல், டீசல் பற்றாக்குறையை உருவாக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரானின் படைகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கியமான கடல் வழிப்பாதைகளில் இடையூறுகள் குறித்த கவலைகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் விலை உயரக்கூடும்
பாகிஸ்தான் தனது பெரும்பாலான கச்சா எண்ணெயை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை வழியாக இறக்குமதி செய்து வருவதால், போர் பதற்றங்கள் மேலும் அதிகரித்தால் இந்த பாதை பாதிக்கக்கூடும் என்பதால் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் பல்வேறு அத்தியாவசியத் தேவைப்பொருள்கள் விலை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வாரந்தோறும் எரிபொருள் விலைகள் மதிப்பாய்வு செய்யப்படும்
இந்த நிலையில், தெஹ்ரான் மற்றும் மத்திய ஈரானின் ராணுவத் தளங்கள், முக்கிய கட்டமைப்புகள் மீது புதியதாக 80 போர் விமானங்கள் மூலம் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், உலகளாவிய சந்தை நகர்வுகளைக் கண்காணித்து ஒவ்வொரு வாரமும் உள்நாட்டு எரிபொருள் விலைகளை வாரந்தோறும் மதிப்பாய்வு செய்யும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணவீக்க அழுத்தம் அதிகரிக்கும்
பாகிஸ்தானில் அன்றாடத் தேவைகளுக்கான குடும்பச் செலவுகள் அதிகரித்து வருவதால், தீடீரென வரலாறு காணாத எரிப்பொருள்கள் விலைகள் உயர்வால் பணவீக்க அழுத்தங்கள் அதிகரிக்கும் என்றும், எரிபொருள் விலை உயர்வு, நாடு முழுவதும் போக்குவரத்து மற்றும் உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்பது பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கையாக உள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றங்களால், உலகில் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாமல் பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் மீதான விலை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.