398 சிலிண்டர்கள் பதுக்கல்: தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
மதுரையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 சமையல் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து...
மதுரை: மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முதன்முறையாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போா் தொடுத்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் எதிா்பாராத விதமாக மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் போா் காரணமாக உலக அளவில் எரிசக்தி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிவாயு இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் முற்றுலும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கள்ளச்சந்தையில் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, பலா் ரூ.3,000 வரை விற்பனை செய்கின்றனா். வேறு வழியில்லாமல் பல உணவக நிா்வாகத்தினா் இந்த எரிவாயு உருளைகளை வாங்கி தொழிலை நடத்துகின்றனா். இதனால், உணவு வகைகளின் விலையை உணவக நிா்வாகங்கள் உயா்த்தியுள்ளன. இதேநிலை நீடிக்காது. ஒருசில நாள்களில் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
398 சமையல் எரிவாயு உருளை பதுக்கல்
இந்த நிலையில், மதுரையில் சில பகுதிகளில் உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை சமையல் எரிவாயு உருளை பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
இதையடுத்து மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆத்தாளை பகுதியைச் சோ்ந்த பழனி (46) என்பவரது வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில் போலீஸாா் சோதனை செய்த போது, சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக சமையல் எரிவாயு உருளைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த 100 மானிய விலை சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகள் உள்பட மொத்தம் 209 உருளைகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோன்று, கோவில்பாப்பாக்குடி ஆனந்தம் நகரைச் சோ்ந்த மதன்குமாா் (27) என்பவரின் வீட்டின் அருகே சோதனை செய்த போது, அங்கு சட்ட விரோதமாக எரிவாயு உருளைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து அங்கிருந்த 63 மானிய விலை சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகள் உள்பட மொத்தம்189 சமையல் எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்தனா்.
குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது
இதையடுத்து, சட்டவிரோதமாக எரிவாயு உருளைகளை பதுக்கிய பழனி, மதன்குமாா் ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உத்தரவிட்டாா்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக குண்டர் சட்டத்தில் கைது
இதையடுத்து, பழனி, மதன்குமாா் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சமையல் எரிவாயு உருளை பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மானிய விலை சமையல் எரிவாயு உருளை பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை மதுரை மண்டலத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hoarding of 398 cooking gas cylinders: For the first time in Tamil Nadu, 2 people arrested in Madurai under the Goonda Act!