தொடர்விடுமுறை: இன்று முதல் கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
மே நாள், வார விடுமுறை நாள்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து...
மே நாள் விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, மக்கள் பயணம் செய்வதற்கு வசதியாக வெள்ளிக்கிழமை(மே.1) கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மே நாள் விடுமுறை, சித்ரா பௌர்ணமி நாளான வெள்ளிக்கிழமை(மே 1), வார விடுமுறை நாள்களான சனி(மே 2) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(மே 3) ஆகிய நாள்களை முன்னிட்டு, சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Advertisement
அதன்படி, சென்னையில் இருந்து வியாழக்கிழமை(ஏப்.30) முதல் மே 1 ஆம் தேதி அதிகாலை 3 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இயக்கப்பட்ட 3,876 பேருந்துகளில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 180 பேர் பயணம் செய்துள்ளனர்.
கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.