விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
தவெக ஆட்சி அமைப்பதற்கு விஜய் ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது...
தவெக ஆட்சி அமைப்பதற்கு அந்த கட்சியின் தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது.
இதனிடையே, தமிழகத்தில் ஆட்சியமைக்க மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெகவுக்கு காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு அளித்துள்ளது.
Advertisement
இந்த நிலையில், விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அழைக்காதது அதிர்ச்சியளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் பக்க பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், அந்த கட்சியின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைப்பதற்குத் தமிழக ஆளுநர் இதுவரை அழைக்காதது அதிர்ச்சியளிக்கிறது.
ஜனநாயகத்தின் நலன் கருதி, தமிழக ஆளுநர் உடனடியாக விஜய்யை மாநில அமைச்சரவையை அமைக்க அழைப்பதோடு, அவரே முதல்வராகப் பொறுப்பேற்று, பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.