இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவமிநாதன் நியமனம்!
இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
புதுதில்லி: இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக பணியாற்றி வரும் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி மே 31-ஆம் தேதி ஓய்வுபெறுகிறார்.
Advertisement
இதையடுத்து, தற்போது மேற்கு மண்டல கடற்படை பிரிவு தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனை இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது. இவர், மே 31 ஆம் தேதி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பதவிக்காலம் 2028 டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 31, 2025 அன்று மேற்கு மண்டல கடற்படை பிரிவுவின் 34 -ஆவது தலைமைத் தளபதியாக பொறுப்பேற்ற துணை அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், 1987 ஜூலை 1 ஆம் தேதி இந்திய கடற்படையில் அதிகாரியாகப் பொறுப்பெற்றார். இவர் தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர்முறையில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் கடற்படையில் முக்கியப் பதவிகளில் பணியாற்றியதன் மூலம், சுமார் 40 ஆண்டுகளாக சிறப்பான சேவையையும், விரிவான செயல்பாட்டு, உத்திசார் மற்றும் பணியாளர் மேலாண்மை அனுபவத்தையும் பெற்றுள்ளார்.
இவர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாதமி, இங்கிலாந்தின் ஸ்ரீவென்ஹாமில் உள்ள கூட்டுப் படைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, கரஞ்சாவில் உள்ள கடற்படைப் போர்முறைக் கல்லூரி மற்றும் ரோட் தீவின் நியூபோர்ட்டில் உள்ள அமெரிக்கக் கடற்படை போர்க் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டமும், கொச்சியில் உள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பெற்ற தொலைத்தொடர்பு முதுகலை அறிவியல் பட்டமும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பெற்ற பாதுகாப்பு ஆய்வுகள் முதுகலை பட்டமும், மும்பை பல்கலைக்கழகத்தில் பெற்ற வியூக ஆய்வுகள் முதுகலை ஆய்வியல் பட்டமும் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் பெற்ற சர்வதேச ஆய்வுகள் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.