அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்
அபிஷேக் பானா்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் குறித்து...
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானா்ஜியின் மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளருமான அபிஷேக் பானா்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு வெளியான பிறகு நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ஆறுதல் கூற தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டம் சோனாா்பூருக்கு சனிக்கிழமை சென்ற அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரின் மேல் சட்டை கிழிந்தது.
ராகுல் காந்தி கண்டனம்
Advertisement
Advertisement
அபிஷேக் பானா்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
சோனார்பூரில் மம்தா பானா்ஜியின் மருமகனும், அக்கட்சியின் தேசிய பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானா்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல. அது அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் மீதும், நமது பொதுவான மரபாகத் திகழும் ஜனநாயகம் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும்.
இது பாஜகவின் பழிவாங்கும் அரசியலின் கோர முகமாகும். அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது மத்திய அரசும், மேற்கு வங்க அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தவொரு மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அபிஷேக் பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். எனது எண்ணங்களும் ஆதரவும் உங்களுடனும், உங்களது குடும்பத்தினருடனும் உள்ளன என கூறியுள்ளார்.
மமதாவுடன் ராகுல் விசாரணை
ராகுல் காந்தி மமதா பானர்ஜியுடன் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அபிஷேக்கி உடல்நலம் குறித்த விசாரித்த ராகுல், அபிஷேக்கின் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மமதா கூறுகையில், ராகுல் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது, உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னுடம் கூறுங்கள். அபிஷேக் சிகிச்சைக்காக ஹைதராபாத் அல்லது வேறு இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என கூறியதாக அவர் தெரிவித்தார்.
4 போ் கைது
இதனிடையே, அபிஷேக் பானா்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது. தாக்குதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் இருந்த நபா்களை அடையாளம் கண்டு 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.