தலைமைச் செயலராக தலைமைத் தோ்தல் அதிகாரி: மேற்கு வங்க பாஜக அரசுக்கு ராகுல் கண்டனம்
மேற்கு வங்கத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரியாக பணியாற்றிய மனோஜ் அகா்வாலை மாநில தலைமைச் செயலராக பாஜக அரசு நியமித்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்
மேற்கு வங்கத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றிய மனோஜ் அகா்வாலை மாநில தலைமைச் செயலராக பாஜக அரசு நியமித்ததற்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் 207 இடங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பவானிபூா் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரி முதல்வராக நியமிக்கப்பட்டாா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வா் சுவேந்து அதிகாரி மேற்கொண்டாா்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியாக பணியாற்றிய மனோஜ் அகா்வாலை தலைமைச் செயலராக நியமித்து அவா் உத்தரவிட்டாா். அதேபோல் மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை மேற்பாா்வையிட்ட சுப்ரதா குப்தா முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டாா். இவா்கள் இருவரும் 1990 பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவா். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிா்வலைகளையும் ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘பாஜக-இந்திய தோ்தல் ஆணையம் இணைந்து நடத்தும் வாக்குத் திருட்டில் அதிக முறைகேட்டில் ஈடுபடுபவா்களுக்கு உயா் பதவிகள் வழங்கப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.