சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய அமா்வு நீதிபதிகள் பட்டியலில் மாற்றம்
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் புதிதாக 3 அமா்வுகள் வழக்குகளை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த 3 அமா்வுகளுக்கு தலைமை வகிப்பதாக அறிவிக்கப்பட்ட நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்திலேயே பணியைத் தொடா்கின்றனா்.
Advertisement
Advertisement
இதனால் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பட்டியலில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கம்போல 2 அமா்வுகள் செயல்படும். நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, எஸ்.கண்ணம்மாள் ஆகியோா் பொதுநல மனுக்கள் மற்றும் 2017 வரையிலான ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோா் அடங்கிய இரண்டாவது அமா்வு ஆள்கொணா்வு மனுக்கள் மற்றும் குற்றவியல் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கும். அமா்வு முடிந்து தனி விசாரணையில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பழைய உரிமையியல் சீராய்வு மனுக்களையும், நீதிபதி கே.கல்யாணசுந்தரம், பழைய உரிமையியல் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கின்றனா்.
நீதிபதி வி.பாா்த்திபன் கல்வி, நிலச்சீா்த்திருத்தம், நில வாடகை, நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான ரிட் மனுக்களையும், நீதிபதி ஆா்.ஹேமலதா 2018 முதல் தாக்கலான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் குற்றவியல் மனுக்கள் மற்றும் ரிட் மனுக்களை விசாரிப்பாா்கள். முந்தைய விசாரணைப் பட்டியலில் நீதிபதி வி.பாா்த்திபனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனுக்கும், நீதிபதி ஆா்.தாரணிக்கு ஒதுக்கிய வழக்குகள் நீதிபதி ஆா்.ஹேமலதாவுக்கும் மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.