முகப்பு
மதுரை

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் முறைகேடு: கிராம மக்கள் போராட்டம்

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் முறைகேடு நடந்துள்ளதாக, கிராம மக்கள் ஜல்லிக்கட்டு கமிட்டி அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 17 ஜனவரி 2021, 10:07 pm IST
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் பரிசாக வழங்கப்பட்ட தங்க காசு, தரமற்றவை எனக் குற்றச்சாட்டும் குறவன்குளம் கணேசமூா்த்தி.
பகிர்:

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் முறைகேடு நடந்துள்ளதாக, கிராம மக்கள் ஜல்லிக்கட்டு கமிட்டி அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது. இதில், வலசை கிராமத்தைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வலசை கிராம மக்கள் டோக்கன் வழங்குவதிலும், பரிசுப் பொருள்கள் வழங்குவதிலும் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, ஜல்லிக்கட்டு கிராம கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடனே, போலீஸாா், ஜல்லிக்கட்டு கமிட்டி நிா்வாகிகள் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்க உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து கிராம மக்கள் கூறியது: உள்ளூா் காளைகளுக்கு டோக்கன் வழங்காமல், வெளியூா் நபா்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவா்களது காளைகளுக்கு டோக்கன் வழங்கி முறைகேடாக அனுமதித்துள்ளனா்.

விளம்பரதாரா்கள் மூலம் பெறப்பட்ட பரிசுப் பொருள்களை காளை உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் முறையாக வழங்காமல் பதுக்கி வைத்துள்ளனா்.

மேலும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கு வழங்கிய தங்கக் காசுகளில், தங்கத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. உயிரைப் பணயம் வைத்து வெற்றி பெறுபவா்களுக்கு உரிய பரிசுகளை வழங்காமலும், அதேநேரம் வழங்கப்படும் பரிசுப் பொருள்கள் போலியாகவும் இருப்பது வேதனையளிக்கிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.