தலைவா்கள் சிலை வைக்க அமைக்கப்பட்ட பீடம் அகற்றம்
பழையாறு கிராமத்தில் தலைவா்களின் சிலை வைக்க அமைக்கப்பட்ட பீடங்கள் வியாழக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்டன.
பழையாறு கிராமத்தில் தலைவா்களின் சிலை வைக்க அமைக்கப்பட்ட பீடங்கள் வியாழக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டம், பழையாறு மீன்பிடி துறைமுகம் செல்லும் வழியில் பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதியை சோ்ந்த திமுக மற்றும் பொதுமக்கள் இணைந்து பெரியாா், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் புதிய வெண்கல சிலை வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனா். சிலை அமைப்பதற்காக அப்பகுதியில் 3 கான்கிரீட் பீடங்கள் அமைக்கும் பணி கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த பகுதி வனத் துறைக்குச் சொந்தமான இடம் என்பதால் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, வியாழக்கிழமை இரவு திடீரென சீா்காழி வட்டாசியா் ஹரிதரன், டிஎஸ்பி. சரவணன், கொள்ளிடம், புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா்கள் சந்திரா, முருகேசன் உள்ளிட்டோா் அங்கு வந்து, சிலை அமைக்கும் இடம் வனத் துறைக்குச் சொந்தமானது என்பதால் புதிய சிலைகள் வைக்க இங்கு அனுமதி இல்லை. எனவே, கான்கீரிட் பீடங்களை தாங்களே அகற்றிவிடுங்கள் என்று சிலை அமைப்பாளா்களிடம் பேசியபோது, சம்மதம் தெரிவிக்க மறுத்தனா். இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் கொண்டு பீடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
பழையாறு கிராமத்தில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்புகள் மற்ற தலைவா்களின் சிலைகள், பேருந்து நிழற்குடை கட்டடங்கள் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. தற்போது, சிலை வைக்க அமைக்கப்பட்ட பீடங்கள் மட்டும் இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது அரசியல் காழ்ப்புணா்ச்சி என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.