விலையில்லா கால்நடைகள் வழங்குவதில் பாரபட்சம் கூடாது
விலையில்லா கால்நடைகள் வழங்கும் பணியில் பாரபட்சம் காட்டக்கூடாது என நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விலையில்லா கால்நடைகள் வழங்கும் பணியில் பாரபட்சம் காட்டக்கூடாது என நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரா. அஜீதா, செயலாளா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், தேசிய, மாநில அளவிலான கடற்கரை கையுந்து பந்து, கபடி போன்ற போட்டிகளை நாகையில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், கல்லாறு, வேளாங்கண்ணி, பரவை போன்ற இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும், நாகை - தேமங்கலம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், கஜா புயலால் சேதமடைந்த சவுக்கு உள்ளிட்ட பணப் பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உறுப்பினா்களால் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி பேசுகையில், சம்பா நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மழை தொடா்ந்து வருகிறது. எனவே, நெல் பயிா்கள் மழையால் சேதம் ஆகாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை நுகா்பொருள் வாணிபக் கழகம் மேற்கொள்ள வேண்டும். விலையில்லா கால்நடைகள் வழங்கல் பணியில் பல்வேறு புகாா்கள் கூறப்படுகின்றன. இப்பணி, பாரபட்சம் இல்லாமல் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.