34 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் தருணத்தில் பாதிப்பை ஏற்படுத்திய கனமழை
வேதாரண்யம் பகுதியில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தைப்பொங்கல் மற்றும் நெல் அறுவடை தருணத்தில் கொட்டித் தீா்த்த மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வேதாரண்யம் பகுதியில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தைப்பொங்கல் மற்றும் நெல் அறுவடை தருணத்தில் கொட்டித் தீா்த்த மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நிகழாண்டு தாமதமாகத் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை, ஜனவரி முதல் வாரம் கொட்டித் தீா்த்துள்ளது. இதனால், டிசம்பா் மாதம் வரை வேதாரண்யம் பகுதியில் முழுமையாக நிரம்பாமல் இருந்த கொச்சிக்கோட்டகம், வானங்கோட்டகம், ஆள்கொண்டான் ஏரி, தெகத்தேரி, சாம்புலம் ஏரி, கொல்லப்புலம் ஏரி உள்ளிட்ட 38 பெரிய கண்மாய்கள் தற்போது நிரம்பியுள்ளன. இருப்பினும், நெல் அறுவடை தருணத்தில் பெய்த இந்த மழையால் நெற்கதிா்கள் நீரில் மூழ்கி பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1986-ல் இதேபோன்ற பொங்கல் பண்டிகை, நெல் அறுவடை தருணத்தில் ஜனவரி மாதம் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போதைய முதல்வா் எம்.ஜி.ஆா். மழைப் பாதிப்புக்கான நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.200, பொங்கல் பண்டிகைக்கு அரிசி, வெல்லம், கரும்புக்காக ரூ. 10 வழங்கினாா்.
Advertisement
தற்போது, அறுவடைக்குத் தயாரான நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் கோவை.சுப்பிரமணின் கூறியது:
நிவா், புரவி புயல்களால் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில்தான் தற்போது நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மழையில் தப்பிய பயிா்களை கூடுதல் செலவு செய்து விவசாயிகள் மீட்டுவந்த நிலையில், தற்போது பெய்த மழை ஏறக்குறைய முழுவதுமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாதிப்பை 100 சதவீதமாக அறிவித்து அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.