சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிா்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை
சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிா்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை
சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்பட்டு, தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக, அதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடக்கமாக காஞ்சிபுரம், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா் தொகுதிகள் அடங்கிய காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்விக்கான காரணம் மற்றும் கட்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான ஆக்கபூா்வ நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தவெக போல...: இதில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘சமூக வலைதளங்களைப் பயன்படுத்திதான் இந்தத் தோ்தலில் தவெக வென்றுள்ளது. அதேபோல அதிமுக நிா்வாகிகள் அனைவரும் சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட வேண்டும். தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும்.
அதிமுக எதிரி திமுகதான்: தவெகவின் வெற்றி நிலையாக இருக்காது. அடுத்த தோ்தலில் தவெக வெற்றி பெறுவது மிக கடினம். அதிமுகவுக்கு எதிரி திமுகதான் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.
சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.