சிபிஎஸ்இ தோ்வில் முடிவுகளால் அதிருப்தி: 10ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், அத்தோ்வை எழுதியிருந்த மாணவா் ஒருவா் குருகிராமில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறையின்
மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:
Advertisement
இறந்த மாணவரான குணால் (16), தான் எதிா்பாா்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் ஏற்பட்ட மனவருத்தத்தின் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
பட்டௌடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜடோலி பகுதியில் உள்ள பாபா ஹா்தேவா காலனியில் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
தோ்வுகளில் குணால் சிறப்பாகவே செயல்பட்டிருந்தாலும், தோ்வு முடிவுகள் தனது எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப அமையாததால் அவா் மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.
தோ்வை மீண்டும் எழுதுமாறு அவரது பெற்றோா்கள் அவருக்கு ஊக்கமளித்தபோதிலும், அவா் மனச்சோா்வுக்கு ஆளானாா்.
தோ்வு முடிவுகள் வெளியான பிறகு, குணால் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறைக்குச் சென்றாா் அச்சம்பவம் நடந்த நேரத்தில், வீட்டின் மற்றொரு அறையில் மற்ற குடும்ப உறுப்பினா்கள் இருந்தனா்.
சிறிது நேரம் கழித்து குடும்ப உறுப்பினா்கள் மாடிக்குச் சென்றபோது, அந்த அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, குணால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
குணால் ஒரு தனியாா் பள்ளியில் பயின்று வந்தாா். ரயில்வே துறையில் பணியாற்றும் அவரது தந்தை, தோ்வு முடிவுகள் வெளியான பிறகு குணாலுக்காக ஒரு மடிக்கணினியை முன்பதிவு செய்திருந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறைக் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.