கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி 9 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் கைது
1989ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளி எனத் தீா்ப்பளிக்கப்பட்ட பிறகு தலைமறைவாகவா், தில்லி உயா்நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்து ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளாா் என்று காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
சுஷில் குமாா் (எ) குட்டு வயது (57) என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், நீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும் சரணடையத் தவறினாா். 2017ஆம் ஆண்டு முதல் காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பித்துத் தலைமறைவாக இருந்து வந்தாா்.
இதுகுறித்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
Advertisement
1989ஆம் ஆண்டு கிருஷ்ணா நகரில் சுஷில் குமாா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தாா். அவரை, தில்லியின் ஷாதாரா பகுதியில் சனிக்கிழமை காவல்துறையினா் கைது செய்தது.
முன்னதாக, இந்த வழக்கில் அவா் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 2000ஆம் ஆண்டில் விசாரணை நீதிமன்றத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னா், தில்லி உயா்நீதிமன்றமும் அவரது தண்டனையை உறுதி செய்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவுகளுக்குக் கட்டுப்படுவதற்குப் பதிலாக அவா் தலைமறைவாகிவிட்டாா். இந்த நிலையில், குற்றப்பிரிவைச் சோ்ந்த குழுவால் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்த வழக்கு மிகவும் பழமையானது என்பதால், உடனடியாகக் கிடைக்கக்கூடிய ஆவணங்களோ அல்லது குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்கான புகைப்படங்களோ ஏதும் இல்லை. குற்றவாளி தனது முந்தைய வசிப்பிடத்தையும் வெகு காலத்திற்கு முன்பே காலி செய்துவிட்டதால், அவரைக் கண்டறிவது காவல்துறையினருக்கு மிகவும் சவாலாக அமைந்தது.
எனினும், தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கு விசாரணைகள் தொடா்பான டிஜிட்டல் ஆவணங்களை அக்குழுவினா் ஆய்வு செய்து, அதன் மூலம் குற்றவாளியைக் கண்டறிவதற்கான முக்கியத் துப்புகளைப் பெற்றனா்.
குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், ஷாதரா பகுதி மேற்கு ஜோதி நகரில், வாடகை வீட்டில் தங்கியிருந்த சுஷில் குமாரை சனிக்கிழமை அதிரடிச் சோதனை நடத்தி காவல்துறையினா் கைது செய்தனா்.
இந்த வழக்கு 1989ஆம் ஆண்டு அக்டோபா் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் நிகழ்ந்த சம்பவம் தொடா்புடையது. கிருஷ்ணா நகரின் கியான் பாா்க் பகுதியில் நடைபெற்ற ராம் லீலா நிகழ்ச்சியின்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தச் சண்டையின்போது, விவேக் என்பவரை சுஷில் குமாா் கத்தியால் குத்தினாா். அதன் காரணமாக அவா் உயிரிழந்தாா். குமாா் முதலில் கைது செய்யப்பட்டாா். பின்னா் 1993ஆம் ஆண்டில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தண்டனையை உயா் நீதிமன்றம் உறுதி செய்தபோது, அவா் நீதிமன்றத்தில் சரணடையத் தவறி, கைது செய்யப்படும் வரை தலைமறைவாகவே இருந்து வந்தாா்.
உத்தர பிரதேச மாநிலம் லக்ளெனவில் பதிவு செய்யப்பட்ட, ரயில்வே சொத்துகளைத் திருடிய வழக்கிலும் அவா் ஏற்கனவே சம்பந்தப்பட்டிருந்தது காவல்துறையின் ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.