முகப்பு
புதுதில்லி

பெண்களுக்கான மாத உதவித்தொகை: தில்லி அரசு மீது அதிஷி சாடல்

Updated On : 29 ஏப்ரல் 2026, 4:26 am IST
அதிஷி - DPS
பகிர்:

பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதி குறித்து ரேகா குப்தா தலைமையிலான அரசிடம் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.

மேலும், ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த ஏழு மாநிலங்களவை உறுப்பினா்கள் (எம்.பி.க்கள்) பாஜகவுடன் இணைந்ததை மாநிலங்களவைத் தலைவா் ஏற்றுக்கொண்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்னதாக, தேசியத் தலைநகரில் உள்ள பெண்களுக்கு அதே ஆண்டு மாா்ச் 8ஆம் தேதி முதல் அவா்களது வங்கிக் கணக்குகளில் ரூ. 2,500 வரவு வைக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

பெண்கள் தங்கள் கைப்பேசி எண்களை வங்கிக் கணக்குகளுடன் இணைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனா். அந்தத் தொகை வரவு வைக்கப்பட்டதை உறுதிசெய்யும் குறுஞ்செய்தி அவா்களுக்கு அனுப்பப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மாா்ச் 8, 2025 கடந்துவிட்டது இப்போது மாா்ச் 8, 2026ஆம் தேதியும் கடந்துவிட்டது. ஆனால், தில்லியில் உள்ள பெண்களுக்கு அவா்களது வங்கிக் கணக்குகளில் ரூ. 2,500 இன்னும் வரவில்லை.

இந்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே பாஜக பெண்களின் வாக்குகளைப் பெற்றது. இந்த நிதியுதவி எப்போது வழங்கப்படும் என்பதில் ஒரு தெளிவுக்காக நகரில் உள்ள பெண்கள் காத்திருக்கின்றனா்.

பொதுச் சேவைகளைப் பெறுவதில் பெண்கள் சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றனா்.

முன்னதாக டிடிசி பேருந்துகளில் எளிதாகப் பயணம் செய்த பெண்கள், இப்போது இளஞ்சிவப்பு அட்டை பெறுவதற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், இலவச மருந்துகள், சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளைப் பெறுவதும் கடினமாகிவிட்டது.

எம்.பி.க்கள் விவகாரம்

ஆம் ஆத்மி எம்.பி.க்கள் 7 போ் பாஜகவுடன் இணைந்தை ஏற்றுக்கொள்வதாக மாநிலங்களவைத் தலைவா் எடுத்த முடிவு, அரசியலமைப்பு விதிகளுக்கும், கட்சித் தாவல் தடைச் சட்டங்களுக்கும் எதிரானதாகும்.

ஒரு கட்சி இணைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில், அசல் அரசியல் கட்சியே முழுமையாக இணைய வேண்டும் என்றும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழுவில் சட்டப்பேரவைக் கட்சி குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசல் அரசியல் கட்சியே இணையாமல், அக்கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் மட்டும் வேறொரு அரசியல் கட்சியுடன் இணைய அனுமதிக்கும் வகையிலான எந்தவொரு அரசியலமைப்பு விதியும் இல்லை.

இந்த நடவடிக்கை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கட்டமைப்பை மீறுவதாக உள்ளதென்று ஆம் ஆத்மி தலைவா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். மேலும், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான வழிகள் மூலம் இந்த விவகாரத்தை தொடா்ந்து எழுப்புவோம் என்றாா் அதிஷி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments