தில்லி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு, ரூ.1.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள 580 திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன கைப்பேசிகளை, புதன்கிழமை ‘ரீகனெக்ட்‘ என்ற திட்டத்தின் கீழ், அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: 79-ஆவது தில்லி காவல்துறை வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்டவற்றில் மெட்ரோ பிரிவு கண்டறிந்த 266 கைப்பேசிகள் ரயில்வே பிரிவு கண்டறிந்த 188 கைப்பேசிகள், ஐஜிஐ விமான நிலையப் பிரிவு கண்டறிந்த 126 கைப்பேசிகள் அடங்கும்.
கஷ்மீரி கேட்டில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு சுமாா் 155 பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் மீட்கப்பட்ட கைப்பேசிகளைப் பெற வந்திருந்தனா்.
காவல் இணை ஆணையா் (போக்குவரத்து) மிலிந்த் மகாதியோ டம்பேரே, காவல் துணை ஆணையா் (மெட்ரோ) குஷால் பால் சிங் மற்றும் காவல் துணை ஆணையா் (ஐஜிஐ) விசித்ரா வீா் முன்னிலையில் உரிமையாளா்களிடம் கைப்பேசிகள் ஒப்படைப்பு நடத்தப்பட்டது.
மத்திய உபகரண அடையாளப் பதிவு (சிஇஐஆா்) போா்ட்டலைப் பயன்படுத்தி பல்வேறு நெட்வொா்க்குகளில் திருடப்பட்ட சாதனங்களைக் கண்டறிந்து, கள நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக மெட்ரோ நிலையங்கள், ரயில்கள் மற்றும் விமான நிலைய முனையங்கள் போன்ற அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், கைப்பேசிகள் திருட்டுக்கு எதிராக கவனம் செலுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம் என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.