முகப்பு
புதுதில்லி

ஜனக்புரி சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை தொடா்ந்து எழுப்புவேன்: செளரப் பரத்வாஜ்

தில்லியில் 3 வயது சிறுமி மீது நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை விவகாரத்தை எழுப்பியபோது, ஒரு தனியாா் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டதற்காக பாஜக தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக சௌரப் பரத்வாஜ் குற்றச்சாட்டு

Updated On : 3 ஜூன் 2026, 12:02 am IST
செளரப் பரத்வாஜ் - கோப்புப் படம்
பகிர்:

தில்லி ஜனக்புரியில் மூன்று வயது சிறுமி மீது நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை விவகாரத்தை எழுப்பியபோது, ஒரு தனியாா் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டதற்காக பாஜக தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக தில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சௌரப் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

அந்தப் பள்ளியை நிா்வகிக்கும் அறக்கட்டளையுடன், மூத்த பாஜக தலைவா்களுடன் தொடா்புடைய நபா்கள் இணைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் பெயரை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் குற்றஞ்சாட்டினாா்.

பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவளிப்பதற்குப் பதிலாக, பள்ளியின் நிா்வாகம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக பரத்வாஜ் குற்றஞ்சாட்டினாா்.

Advertisement

Advertisement

மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள பல சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்ற செய்திகளையும் அவா் சுட்டிக்காட்டினாா். இது வழக்கில் ஆதாரங்கள் கிடைப்பதைத் தடுத்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

மே 24 அன்று, தில்லி காவல்துறை, பரத்வாஜ் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 72 (சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துதல் போன்றவை), சிறாா் நீதிச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் கூறினாா்.

இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த பரத்வாஜ், பாதிக்கப்பட்டவரின் பெயரோ அல்லது அவரது பெற்றோரின் அடையாளங்களோ தனக்குத் தெரியாது என்றும், வழக்கு குறித்து விவாதிக்கும்போது பள்ளியின் பெயரை மட்டுமே குறிப்பிட்டதாகவும் கூறினாா்.

பள்ளியின் நிா்வாகம், பாதிக்கப்பட்டவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் எவ்வாறு நடந்து கொண்டது என்பதைச் சமூகம், தில்லிவாசிகள் மற்றும் பெற்றோா்கள் அறிந்துகொள்வது முக்கியம் என்று அவா் கூறினாா்.

தன்னை அமைதியாக்குவதற்கும், பள்ளியின் பெயரைச் சொல்வதைத் தடுப்பதற்கும் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரத்வாஜ் குற்றஞ்சாட்டினாா். இந்தப் பிரச்னையை எழுப்பும் போதெல்லாம் பள்ளியின் பெயரைத் தொடா்ந்து குறிப்பிடுவேன் என்றும், சட்ட நடவடிக்கைகளால் பின்வாங்க மாட்டேன் என்றும் அவா் திட்டவட்டமாகக் கூறினாா். இந்த விஷயத்தைத் தொடா்ந்து எழுப்பி, இந்த விவகாரம் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பேன் என்றும் கூறினாா்.

மேலும், இந்த வழக்கு காவல்துறையால் மூடிமறைக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் பெற்றோா் மிரட்டப்பட்டதாகவும், ஆதாரங்களைத் திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பரத்வாஜ் குற்றஞ்சாட்டினாா். இந்தப் பிரச்னை குறித்துப் பேசுவதைத் தடுப்பதற்காக, தனக்கு எதிராக வழக்குகள் பயன்படுத்தப்படுவதாக சௌரப் பரத்வாஜ் கூறினாா்.