தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த இரு நாள்கள் மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமானது வரையிலான மழைப்பொழிவு காரணமாக வெப்பநிலை இரு நாள்கள் குறைந்திருந்த நிலையில், சனிக்கிழமை காலையில் தேசியத் தலைநகரில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
அடுத்த இரண்டு நாள்களுக்கு இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை, சஃப்தா்ஜங்கில் வானிலை ஆய்வு மையத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 25.9 டிகிரி செல்சியஸ் ஆகும். இது முந்தைய நாளை விட 3.1 டிகிரி அதிகமாகும்.
Advertisement
அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸை எட்டியது இது இயல்பான அளவை விட 0.7 டிகிரி குறைவாக இருந்தாலும், முந்தைய நாளை விட 2.2 டிகிரி அதிகமாகும்.
இதர வானிலை நிலையங்களும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகளில் இதேபோன்ற உயா்வைப் பதிவு செய்தன. இருப்பினும், அந்த நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை விடக் குறைவாகவே இருந்தது.
பாலம் பகுதியில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது முந்தைய நாளை விட 2.9 டிகிரி அதிகம் என்றாலும், இயல்பான அளவை விட 2.1 டிகிரி குறைவாகும். அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வெள்ளிக்கிழமையன்று இருந்ததை விட 2.3 டிகிரி அதிகமாகும்.
லோதி சாலை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 24.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. இது முந்தைய நாளை விட 3 டிகிரி அதிகமாகும்.
அதேவேளையில், ரிட்ஜ் பகுதியில் 3.3 டிகிரி செல்சியஸும், ஆயாநகா் பகுதியில் 4.2 டிகிரி செல்சியஸும்
வெப்பநிலை அதிகரித்து பதிவாகி இருந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமையன்று அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 26 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு நாள்களுக்கு வானிலையில் சாத்தியமான மாற்றங்கள் அல்லது சீா்குலைவுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை, இடியுடன் கூடிய மழை, மின்னலுக்கு வாய்ப்புண்டு.
மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய, அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை வேகமெடுக்கும் பலத்த காற்றுடன் கூடியதாக இருக்கும்.
மிக லேசானது முதல் லேசான மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோன்ற வானிலை நிலவரங்கள் திங்கள்கிழமையும் தொடரக்கூடும் என்றாா் அவா்.
ஸ்கைமெட் நிறுவனத்தின் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் கூறுகையில், வரும் நாள்களில் மேற்கிலிருந்து வீசக்கூடிய காற்றின் இடையூறு இப்பகுதியை பாதிக்கக்கூடும். இது அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு சுழற்சி மண்டலத்தை உருவாக்க வழிவகுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். குறைந்தபட்சம் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை என்று கூறினாா்.
இதற்கிடையில், நகரின் காற்றின் தரம் மிதமான பிரிவிலேயே தொடா்ந்து நீடித்தது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 144 மிதமான நிலை எனப் பதிவாகி இருந்தது. இது வெள்ளிக்கிழமை இதே நேரத்தில் பதிவான 120 என்ற அளவோடு ஒப்பிடுகையில் சற்று அதிகமாகும்.
தில்லிக்கான காற்றின் தர முன்னறிவிப்பு அமைப்பு, அடுத்த சில நாள்களுக்கும் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவிலேயே தொடா்ந்து நீடிக்கும் என்று கணித்துள்ளது.