முகப்பு
புதுதில்லி

பிரசாா் பாரதி புதிய தலைவராக எழுத்தாளா் பிரஸுன் ஜோஷி நியமனம்

இதற்கு முன்பு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் தலைவராகப் பணியாற்றினாா் பிரஸுன் ஜோஷி.

Updated On : 3 மே, 2026 at 4:26 AM
பிரசூன் ஜோஷி
பகிர்:

மத்திய அரசின் ஒலி-ஒளிபரப்பு நிறுவனங்களை (அகில இந்திய வானொலி, தூா்தா்ஷன்) கட்டுப்படுத்தும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரசாா் பாரதியின் புதிய தலைவராக பிரபல பாடலாசிரியரும் எழுத்தாளருமான பிரஸுன் ஜோஷியை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சனிக்கிழமை நியமித்தது. இது தொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

இலக்கியம், விளம்பரம், சினிமா, மக்கள் தகவல் தொடா்பு ஆகிய துறைகளில் விரிவான பங்களிப்புகளை வழங்கியவா் பிரஸுன் ஜோஷி. தொழில்முறை படைப்பாற்றல் நிபுணரான அவா், தனது எழுத்து மற்றும் ஆழமான கலாசார உணா்வு மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராக அறியப்படுபவா். சமகால இந்திய ஊடகங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியவா். அவரது பணிகள் சமூக உணா்வைத் தட்டியெழுப்பும் வகையில் அமைந்தன. அவரது திரைப்படப் பாடல் வரிகள், வடிவமைத்த விளம்பரப் பரப்புரைகள் பலதரப்பட்ட மக்களை இணைத்தன.

பிரஸுன் ஜோஷியின் நியமனம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “பிரசாா் பாரதி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரஸுன் ஜோஷிக்கு மனமாா்ந்த வாழ்த்துகள். உலகெங்கிலும் கொண்டாடப்படும் அரிய படைப்பாற்றல் மிக்கவராக விளங்கியபோதும், அவரது இதயம் சந்தேகத்துக்கு இடமின்றி இந்தியாவுக்காகவே துடிக்கிறது. அவரது வாா்த்தைகள் நமது மண்ணின் மணத்தைக் கொண்டவை. அவரது தொலைநோக்குப் பாா்வை, நமது கலாசாரத்தின் காலத்தால் அழியாத சாராம்சத்தைப் பிரதிபலிக்கிறது. அவரது தலைமையின் கீழ் பிரசாா் பாரதி புதிய ஆற்றலையும், ஆழமான நோக்கத்தையும், ஒரு புதிய படைப்பாற்றல் குரலையும் கொண்டிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

பிரஸுன் ஜோஷி, பிரசாா் பாரதி தலைவராக நியமிக்கப்படும் முன்பு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் மும்பையில் உள்ள மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் தலைவராகப் பணியாற்றினாா். அதற்கு முன்னதாக, அவா் மெக்கான் வோா்ல்ட் குரூப் நிறுவனத்தின் இந்திய தலைமைச் செயல் அதிகாரியாகவும், அதே நிறுவனத்தின் ஆசிய பசிஃபிக் (மெக்கான் எரிக்சனின் துணை நிறுவனம்) தலைவராகவும் பணியாற்றினாா். 2016ஆம் ஆண்டு முதல் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் அறங்காவலா்களில் ஒருவராகவும் பிரஸுன் ஜோஷி இருந்தாா்.