முகப்பு
புதுதில்லி

ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் சுகேஷின் மனைவிக்கு பிணை மறுப்பு

இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி பணம் மிரட்டிப் பறித்த வழக்கில் அவரது மனைவி லீனா பவுலோஸுக்கு பிணை வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

Updated On : 6 மே 2026, 1:54 am IST
தில்லி உயர்நீதிமன்றம்
பகிர்:

இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி பணம் மிரட்டிப் பறித்த வழக்கில் அவரது மனைவி லீனா பவுலோஸுக்கு பிணை வழங்க தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. ஆனால், அது தொடா்புடைய பணமோசடி வழக்கில் அவருக்கு நிவாரணம் வழங்கியது.

தில்லி காவல்துறை மற்றும் அமலாக்கத் துறை விசாரிக்கும் இரண்டு வழக்குகளில் பவுலோஸின் பிணை மனுக்களை நீதிபதி பிரதீக் ஜலான் விசாரணை மேற்கொண்டாா்.

ரன்பாக்ஸியின் முன்னாள் நிறுவனா்களான சிவிந்தா் சிங் மற்றும் மல்விந்தா் சிங் ஆகியோரின் மனைவிகளிடம் இருந்து ரூ.200 கோடி மோசடி செய்ததாக சந்திரசேகா் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Advertisement

பணமோசடி வழக்கில் சிறையில் இருந்த சிவிந்தா் சிங்கின் மனைவி அதிதி சிங்குக்கு பிணை பெற்றுத் தருவதாக அரசு அதிகாரிகள் போல் நடித்து, சந்திரசேகரும் அவரது கூட்டாளிகளும் பணம் பெற்ாக காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

சந்திரசேகருக்கு எதிராக நாடு முழுவதும் பல தனித்தனி விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் காவல்துறை மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளது.

குற்றச்செயல் மூலம் கிடைத்த பணத்தைப் பதுக்குவதற்காக, பவுலோஸ், சந்திரசேகா் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவா்கள் ஹவாலாவைப் பயன்படுத்தியதாகவும், போலி நிறுவனங்களை உருவாக்கியதாகவும் தில்லி காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

காவல்துறையின் வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது.