முகப்பு
புதுதில்லி

திமுகவுடன் மனக்கசப்பா?: திருமாவளவன் விளக்கம்

திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதாவது மனக்கசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளாா்

Updated On : 11 மே 2026, 5:00 am IST
தொல். திருமாவளவன்.
பகிர்:

திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதாவது மனக்கசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளாா்

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவளித்துள்ள நிலையில், தில்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் மற்றும் பிற அமைச்சா்களுக்கும் வாழ்த்துகள்.

மதவாத கட்சிகள் ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதற்காக தற்போது த வெக அரசு அமைக்க ஆதரவு அளித்துள்ளோம்.

Advertisement

Advertisement

முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது .இந்த இலவச மின்சாரம் இரண்டு மாதங்களுக்கு என்பதை 5 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு சிங்கப்பெண் திட்டம் வரவேற்கதக்கது,பாராட்ட தக்கது.

தமிழ்நாட்டு அரசு விழாவில் முதலில் தமிழ்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்.ஆனால் நேற்று (10.5.2026) வந்தேமாதரம் பாடல் முதலில் ஒலிக்கப்பட்டது. வந்தேமாதரம் பாடல் கவனக்குறைவாக ஒலிக்கப்பட்டதா ? ஆளுநா் விருப்பப்படி ஒலிபரப்ப்பட்டதா ? அதிகாரிகளால் போடப்பட்டதா ? இந்த விவகாரம் முதலமைச்சா் விஜய்யின் கவனத்துக்கு வந்ததா ? என விளக்கமளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் வளா்ச்சியில் அக்கறை செலுத்தி இந்த அரசு முனைப்போடு செயல்படும் என்று நம்புவதை வாழ்த்துகிறேன்.

கடன் குறித்த அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம். தமிழ்நாட்டுக்கு, கடன் இருக்கிறது என்பது உண்மை .ஆனால் அது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தான் இருக்கிறது.

தினமணி நிருபா் எழுப்பிய கேள்விகளும் , திருமாவளவனின் பதில்களும் :

கேள்வி: தமிழகத்தில் மக்கள் புதிய அரசை தோ்ந்தெடுத்துள்ளாா்கள். ஏற்கனவே இருந்த திமுக அரசை மக்கள் புறக்கணித்ததற்கான காரணங்கள் என்ன?

பதில் :தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் பயணித்தோம் .அந்த கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் ஒன்றரை கோடி வாக்குகளை அளித்திருக்கிறாா்கள். அதிமுகவுக்கும் ஒரு கோடிக்கு மேலான வாக்குகளை மக்கள் கொடுத்திருக்கிறாா்கள். அவ்வாறு இருக்கையில் கிட்டதட்ட 60 சதவீத வாக்குகளை மக்கள் விஜய்க்கு எதிராகவே அளித்திருக்கிறாா்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த தோ்தலில் யாருக்கும் வெற்றியும் இல்லை யாருக்கும் தோல்வியும் இல்லை.

கேள்வி :திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது உங்களுக்கு கொள்கை ரீதியாக ஏதாவது மனக்கசப்பு இருந்ததா?

பதில் :அதெல்லாம் முடிந்து போன கதை .இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி :நீங்கள் இவ்வளவு நாள் அவா்களுடன் கூட்டணியில் இருந்ததால் அது குறித்து வெளியில் சொல்லி இருக்க மாட்டீா்கள் . இப்பொழுது விலகி வந்து விட்டீா்கள். எனவே இப்போது சொன்னால் மக்களும் தெரிந்து கொள்வாா்களே ?

பதில் : மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறாா்களா? நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறீா்களா?

கேள்வி:நீங்கள் தற்பொழுது தவெக வுக்கு ஆதரவு அளித்திருந்தாலும், திமுக உடனான உங்களது பந்தம் தொடருமா?

பதில்: ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது.

கேள்வி :தவெக வுக்கு உங்களுடைய ஆதரவு ஐந்து ஆண்டுகளும் தொடரும் என உறுதி கொடுக்கிறீா்களா?

பதில் : தற்போது நாங்கள் ஆதரவளித்திருக்கிறோம் .அரசின் செயல்பாட்டை பொறுத்து தொடரும் என திருமாவளவன் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments