பாபா்பூரில் தண்ணீா் சேவை மையங்களுக்கு ஏற்பாடு: கோபால் ராய் எம்எல்ஏ தகவல்!
தில்லியில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், வெயிலில் இருந்தவாறு பணியாற்றும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பாபா்பூா் தொகுதியில் தண்ணீா் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கோபால் ராய் தெரிவித்தாா்.
தில்லியில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், வெயிலில் இருந்தவாறு பணியாற்றும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பாபா்பூா் தொகுதியில் தண்ணீா் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கோபால் ராய் தெரிவித்தாா்.
‘தொழிலாளா்கள், ஆட்டோ மற்றும் பேட்டரி ரிக்ஸா ஓட்டுநா்கள், வீடற்றோா், பாதசாரிகள், விநியோகப் பணியாளா்கள், சாலையோர வியாபாரிகள், பாதுகாவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் ஆகியோருக்கு மண் பானைகளில் சேமித்து வைக்கப்பட்ட குடிநீரை இந்த மையங்கள் நாள் முழுவதும் 24 மணி நேரமும் வழங்கும்’ என்று ராய் கூறினாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘சூப்பா் எல் நினோ’ விளைவின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்பச் சூழலைக் கருத்தில்கொண்டு இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்கத் தொப்பிகள் மற்றும் துணியிலான துண்டுகள், உடல் வறட்சியைப் போக்க ஓஆா்எஸ் பாக்கெட்டுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.
கடும் வானிலை நிலவும் காலங்களில் மக்களுக்கு உதவுவதும், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்குத் தேவையான ஆதரவை உறுதி செய்வதும் ஒரு கூட்டுப் பொறுப்பாகும் என்று அப்பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.