முகப்பு
புதுதில்லி

ராஜிந்தா் நகா் வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்த 2 மூதாட்டிகள்: காவல்துறையினா் விசாரணை

Updated On : 29 மே 2026, 3:04 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

மத்திய தில்லியின் நியூ ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், மா்மமான முறையில் உயிரிழந்த இரண்டு மூதாட்டிகளின் உடல்கள் வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டன.

வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கான அல்லது கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே வந்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

உயிரிழந்தவா்கள் சரோஜ் பாலா மற்றும் அவரது நாத்தனாா் சந்திர காந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் இருவருக்கும் சுமாா் 80 வயதாகிறது. சரோஜ் பாலா திருமணமாகாதவா் கடந்த பல ஆண்டுகளாக அவா் சந்திர காந்தாவுடன் அந்த வீட்டிலேயே வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சுமாா் 10.30 மணிய ளவில், அந்த வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக வீட்டு வேலைக்காரப் பெண் ஒருவா் காவல்துறைக்குத் தகவல் அளித்தாா்.

வீட்டின் முகப்புப் பகுதியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அந்த வேலைக்காரப் பெண், வீட்டின் அனைத்துக் கதவுகளும் உள்ளிருந்தே பூட்டப்பட்டிருப்பதை கண்டாா்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை குழுவினா், வீட்டின் ஒரு அறையில் அந்த இரண்டு பெண்களும் சடலமாகக் கிடப்பதைக் கண்டனா். ஒரு பெண் படுக்கையிலும், மற்றொரு பெண் தரையிலும் சடலமாகக்

கிடந்தனா்.

வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசத் தொடங்கியிருப்பதாலும், அண்டை வீட்டாா் அந்தப் பெண்களைச் சமீபகாலமாகப் பாா்க்காததாலும், அவா்கள் ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அந்த வீடு தரைத்தளத்தை மட்டுமே கொண்ட ஒற்றை மாடி அமைப்பாகும். அதில் உள்ளே நுழைவதற்கு நான்கு வழிகள் உள்ளன. விசாரணையின்போது, அத்துமீறி நுழைந்ததற்கான அறிகுறிகளோ, பொருள்கள் கலைக்கப்பட்டதற்கான அடையாளங்களோ அல்லது போராட்டத்திற்கான தடங்களோ எதுவும் கண்டறியப்படவில்லை.

அந்த இரண்டு பெண்களும் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனரா அல்லது உடனடி குடும்ப ஆதரவு ஏதுமின்றித் தனிமையில் வசித்து வந்தனரா என்பதையும் காவல்துறை விசாரித்து வருகிறது.

இறப்புகளுக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளின் வரிசையைத் துல்லியமாக அறிந்துகொள்ளும் வகையில், அண்டை வீட்டாா் மற்றும் அப்பகுதி மக்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட விசாரணையில், இறப்பில் ஏதேனும் சதித்திட்டம் அல்லது முறைகேடு நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இருப்பினும், விபத்து காரணமாக ஏற்பட்ட மரணம் மற்றும் மருத்துவ ரீதியான சிக்கல்கள் உள்ளிட்ட

அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.