முகப்பு
புதுதில்லி

பருவமழைக்கு முந்தைய தூா்வாரும் பணி 80% நிறைவு!

தில்லி மாநகராட்சி, நான்கு அடி மற்றும் அதற்கு மேற்பட்ட அகலமுள்ள வடிகால்களில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணியின் முதல் கட்டத்தை ஏறக்குறைய 80% நிறைவு செய்துள்ளது.

Updated On : 1 ஜூன் 2026, 2:46 am IST
எம்சிடி
பகிர்:

தில்லி மாநகராட்சி (எம்சிடி), நான்கு அடி மற்றும் அதற்கு மேற்பட்ட அகலமுள்ள வடிகால்களில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணியின் முதல் கட்டத்தை ஏறக்குறைய 80 சதவீதம் நிறைவு செய்துள்ளது.

ஜூன் 30-ஆம் தேதி என்ற காலக்கெடு முடிவடைய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இந்த முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி மாநகராட்சி மூலம் சமா்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, முதல் கட்டத்தின் இலக்கான 1,41,003 மெட்ரிக் டன்னில் மே 19ஆம் தேதி நிலவரப்படி 793 முக்கிய வடிகால்களிலிருந்து 1,12,053.68 மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பணி முன்னேற்றம் 79.47 சதவீதமாக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

நான்கு அடிக்கும் குறைவான அகலமுள்ள வடிகால்களைப் பொறுத்தவரை, 25,850.74 மெட்ரிக் டன் என்ற இலக்குக்கு எதிராக 25,812.99 மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளது. இப்பணி ஏறக்குறைய 99.85 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இந்தப் பிரிவின்கீழ் நகரம் முழுவதும் 12,116 வடிகால்கள் வருகின்றன. சிவில் லைன்ஸ் பகுதி தனது இலக்கை மிஞ்சி 109.08 சதவீதப் பணியை நிறைவு செய்துள்ளது. அதேவேளையில் ரோஹிணி மற்றும் கேசவபுரம் ஆகிய பகுதிகள் 97 சதவீதத்திற்கும் அதிகமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன.

அதிகபட்சமாக 133 முக்கிய வடிகால்களைக் கொண்ட நஜஃப்கா் பகுதி 65.91 சதவீத முன்னேற்றத்தையும் மத்திய மண்டலம் 76.67 சதவீதமும், தென் மண்டலம் 79.74 சதவீதமும் முன்னேற்றம் கண்டுள்ளன.

தில்லியின் பருவமழைக்கு முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் தூா்வாரும் பணி பிப்ரவரி மாதத்தில் தொடங்கியது.

மழைநீா் ஓட்டத்தை மேம்படுத்தவும், பருவமழைக் காலத்தில் ஏற்படும் நீா் தேக்க அபாயத்தைக் குறைக்கவும், எம்சிடியின் அதிகார வரம்பிற்குட்பட்ட 13,000-க்கும் மேற்பட்ட வடிகால்கள் ஒவ்வொரு ஆண்டும் சுத்தம் செய்யப்படுகின்றன.

ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

இதற்கிடையில், நகரத்தின் பல பகுதிகளில் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனால், வரவிருக்கும் பருவமழைக் காலத்தில் தில்லியில் நீா் தேக்கப் பிரச்னை ஏற்படக்கூடும் என்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராசட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் அன்குஷ் நரங் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஷாதரா மற்றும் நஜஃப்கா் உள்ளிட்ட முக்கிய வடிகால்கள் போதுமான அளவு சுத்தம் செய்யப்படவில்லை. மேலும், நிலுவையில் உள்ள தூா்வாரும் பணிகள் மழைக்காலம் தொடங்குவதற்குள் நிறைவு செய்யப்படுமா என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

‘ஷாதரா மற்றும் நஜஃப்கா் போன்ற முக்கிய வடிகால்கள் இன்னும் தூா்வாரப்படவில்லை. இதன் விளைவாக, மழைக்காலத்தின்போது, எம்சிடியின் கீழ் வரும் ஒவ்வொரு தெருவிலும் சாலையிலும் மீண்டும் நீா் தேங்கும் நிலை காணப்படும்’ என்றாா் நரங்.

எனினும், தூா்வாரும் பணிகள் திட்டமிட்டபடியே நடைபெற்று வருவதாகவும், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அவை நிறைவடைந்துவிடும் என்றும் எம்சிடி அதிகாரிகள் உறுதியளித்தனா்.