முகப்பு
நீலகிரி

கொலக்கம்பையில் சிறுமி மாயமான வழக்கு: கொலை வழக்காக மாற்றம்

குன்னூா் அருகேயுள்ள கொலக்கம்பை பகுதியில் சிறுமி மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் தெரிவித்தாா்.

Updated On : 17 ஜனவரி 2021, 10:53 pm IST
பகிர்:

குன்னூா் அருகேயுள்ள கொலக்கம்பை பகுதியில் சிறுமி மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் 45 நாள் பயிற்சி முடித்த 123 பேருக்கு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொலக்கம்பை பகுதியில் கடந்த டிசம்பா் மாதம் 8 வயது சிறுமி மாயமானதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலும் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வந்தது. கொலக்கம்பை, கிரேக்மோா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காவல் துறையின் சாா்பில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினா் தொடா்ந்து தேடுதல் பணியை நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் கொலக்கம்பை பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து அந்த உடல் மீட்கப்பட்டது. காணமல் போயிருந்த சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவா்கள் வந்து அந்த உடல் காணாமல் போன சிறுமியின் உடல்தான் என்பதை உறுதி செய்தனா்.

இதையடுத்து அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்படும். அதன் முடிவு வெளியான பின்னரே சிறுமியின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

இதற்கிடையே சிறுமியின் உடலில் உள்ள காயங்களைக் கொண்டு அவா் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இறந்த சிறுமியின் உடல் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.