பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்
பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் -அ.வெண்ணிலா; பக்.160; ரூ.100; விகடன் பிரசுரம், சென்னை-2; )044- 4263 4283.
பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் -அ.வெண்ணிலா; பக்.160; ரூ.100; விகடன் பிரசுரம், சென்னை-2; )044- 4263 4283.
தமிழ் படைப்புலகில் குறிப்பிடத்தக்க கவிஞராக அறியப்பட்ட அ.வெண்ணிலாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. முதல் 5 கதைகளின் நாயகியாக பிருந்தா வருகிறாள். பூப்பெய்தும் பருவத்தில் உள்ள அவளுடைய குடும்பம் விதிக்கும் தடைகள், ஆண்களால் அவளுக்கு நேரும் அனுபவங்கள் இவற்றில் விவரிக்கப்படுகின்றன. மேல் பார்வைக்கு மென்மையானவர்களாக, அன்பானவர்களாக, இணைக்கமானவர்களாகத் தோன்றும் ஆண்கள் ரகசிய வெளியில் அவளுக்கு, பாலியல் தொல்லை தருபவர்களாக மாறிவிடுகிறார்கள். அடுத்தடுத்து இக்கதைகளை வாசிக்கும் வாசகனுக்கு ஆண்கள் என்றால் இவ்வளவு வக்கிரமிக்கவர்களா? இவர் ஏன் இப்படி சித்திரிக்கிறார்? போன்ற கேள்விகள் எழும்.
இக்கதைகள் ஏதோ ஒரு நோய்க்கூறு தன்மையை வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது. கதை நிகழும் போதே, ஏதோ ஒரு ரகசிய இடத்திலிருந்து ஓர் ஆண் வெளிப்பட்டு அவளை நசுக்கப் போகிறானோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றன கதைகள். அவளுடைய உறவுச் சிக்கல் "பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்' கதையில் அழுத்தமாகப் பதியப்பட்டும் உள்ளது.
Advertisement
Advertisement
இக்கதைகளைத் தாண்டி, கழிப்பறை இல்லாத கிராமத்தில் பெண்கள் படும் சிரமங்களைப் பேசும் "வெளியே', இரண்டாம் தாரமாக வந்து சேரும் பெண்ணின், அவளின் குழந்தைகளின் துயரத்தை சித்திரிக்கும் "பிள்ளைக் கனியமுதே', ஊதாரியான 4 பிள்ளைகளையும், வெட்டிக்கதை பேசும் கணவனையும், நிலத்தையும் தாங்கும் பெண்ணின் வலிமையை பேசும் "ஒரு நெல்லுச் சோறும் சில தண்ணீர்ப் பாக்கெட்டுகளும்' இத்தொகுப்பில் குறிப்பிடத் தக்க கதைகள். மேலும் இன்றைய நவீன முகநூல் வாழ்வை கிண்டலுக்குள்ளாக்கும் "ஓர் எழுதுகோலும் சில திருவிளையாடல்களும்' கதை இவருடைய புனைவுத் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.