இந்திய இலக்கியச் சிற்பிகள்
மந்திரங்களும், யந்திரங்களும் உலகியல் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சில உத்திகளை திருமூலர் விளக்கியுள்ளார்.
இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்-அரங்க. இராமலிங்கம், பக்.128; ரூ. 100; சாகித்திய அகாதெமி வெளியீடு, சென்னை-600 018, ✆ 044- 2431 1741.
பசுக்களை மேய்த்த மூலனின் உடம்பில் சிவ யோகியார் தம் உயிராற்றலைச் செலுத்திய பிறகு மூலனே திருமூலராக மாறுகிறார். அவரே திருமந்திர மாலையை அருளியவர். ஒன்பது தந்திரங்களாக வகைப்பாடு செய்யப்பட்ட திருமந்திரம் பல்வேறு ஆன்மிக மரபுகளையும் கூறுகளையும் ஒன்றிணைத்துக் காட்டியுள்ளது.
மெய்யறிவுக் கல்வியைக் கற்காமல், இகவுலகப் பொருள்களைப் பற்றி கல்வி கற்றவர்கள் இறைவனை அடைய உதவும் ஒளிநெறியிலிருந்து விலகிப் போவர் என்ற திருமூலரின் வாக்கு முற்றிலும் உண்மை. அதை வலியுறுத்தும் வேளையில் யோகநெறிக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார்.
Advertisement
யோகநெறி சார்ந்த அகவழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்த திருமூலர் கோயில் புறவழிபாட்டையும் முறைப்படுத்தி பேசியிருக்கிறார். பிராணாயாமம் செய்யும் முறை, அதனால் ஏற்படும் பலன்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.
மந்திரங்களும், யந்திரங்களும் உலகியல் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சில உத்திகளை திருமூலர் விளக்கியுள்ளார். ஞானத்தை அடைய சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் என நான்கு நிலைகள் உள்ளதையும், அதை கடைப்பிடிக்கும் வழிமுறைகளும் நூலில் கூறப்பட்டுள்ளன.
வீடுபேறு அடைவதற்கே சிவன் இந்தப் பிறவியை அளித்துள்ளான் என்பது திருமூலரின் கருத்து. இந்திய ஆன்மிக இலக்கியங்களில் புராணக் கற்பனைப் புனைவுகள் உண்டு. இதில் திருமூலரின் வாழ்க்கை குறித்த செய்திகளும் விலக்கன்று. புனைவுகளை நீக்கி அவரின் தத்துவங்களைப் பின்பற்றுவது மனிதர்களின் கடமை என்ற கருத்து ஏற்கத்தக்கது.