கனிந்த வாழ்வு
மனநலன், உடல் நல ஆலோசனைகளுடன், முதியோருக்கு வரும் நோய்களுக்கான காத்துகொள்வதற்கான விழிப்புணர்வு வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது.
கனிந்த வாழ்வு - முனைவர் என்.பத்ரி; பக்.152; ரூ.200; பென்பேர்டு பப்ளிகேஷன்ஸ், ✆ 82200 63246.
கல்வித் துறையில் 50 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவரான நூலாசிரியர் ஆராய்ச்சியாளரும்கூட! இவர் முதியோர் சங்கத்தின் 'எல்டர்ஸ்' மாத இதழில் வெளியான 35 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மாறி தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட நிலையில், முதியோர் தனியே வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், முதியோர் இல்லங்கள் பெருகியுள்ளன. இவர்கள் தனித்து வாழும்போது ஏற்படும் சவால்கள், சிக்கல்கள், நோய்கள், பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என்பதை அறிய உதவும் கட்டுரைகளே இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
கால் தடுமாற்றத்தால் கீழே விழுதல், நினைவாற்றால் இழப்பு, மன-மலச் சிக்கல்கள், கால் பராமரிப்பு, உடல் உபாதைகள், உடல் பருமன், கண்கள் பாதுகாப்பு, மருத்துவப் பிரச்னைகள், கோடைகால பராமரிப்பு, குடல் நலன், நீரின் அவசியம், கவலைகள் போன்றவற்றுக்கான தகவல்கள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
முதுமையை மென்மையாகக் கடத்தல், சமூக நலனுக்கான சமூக ஊடகங்கள், ஜப்பானியர்களைப் போல் இளமையுடன் வாழ்தல், சுறுசுறுப்பாக இருத்தல், மருத்துவக் காப்பீட்டின் அவசியம், வாழ்க்கையை ரசித்து வாழ்தல், பொருளாதாரக் குற்றங்களுக்கான தீர்வு, நட்பின் அவசியம், உணவும் உறக்கமும், இளமையுடன் இருக்க முயற்சித்தல், தேவையை உணர்தல், இறுதி வரை இயங்குதல், நேர்மறை உணர்வின் அவசியம்... என்று முதுமையை நினைத்து வருந்தாமல், இளையத் தலைமுறையினரைப் போல் நினைத்துக்கொண்டு இயங்குவதற்கான வழிமுறைகளை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.
முதியோர்களும், எதிர்காலத்தில் முதியோர் ஆகவுள்ள இளைய தலைமுறையினரும் படித்தறிய வேண்டிய தகவல்கள் உள்ளன. மனநலன், உடல் நல ஆலோசனைகளுடன், முதியோருக்கு வரும் நோய்களுக்கான காத்துகொள்வதற்கான விழிப்புணர்வு வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது.