நினைவலைகள்
மாணவர்கள், இளையத் தலைமுறையினர் பல நூல்களைப் படித்து அறிய வேண்டியவற்றை ஒற்றை நூலில் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர்.
நினைவலைகள் - சீத்தலைச்சாத்தன்; பக். 95; ரூ. 110; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட்., பெங்களூரு- 560 076; ✆ 74185 55884.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட குழிபிறையைச் சேர்ந்த நூலாசிரியர் தமிழ்ப் புலவராகப் படிக்க விரும்பியபோதும் காலச்சூழல் வங்கியில் 33 ஆண்டுகள் பணிபுரிய நேர்ந்தது. பத்திரிகையாளர், நூலாசிரியர், ஆன்மிகவியலாளர் என்று பன்முகத்தன்மைகளைக் கொண்ட அவர் தனது சிறுவயதில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் தனது எழுத்து அனுபவத்தின் வாயிலாக ஒருசேர தொகுத்து, நன்மைகள், தீமைகள், விழுமியங்களை நினைவலைகளாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
உறவின் மகத்துவம், ஆத்மா, கடவுள், வாழ்வின் சந்தோஷங்கள், பழமொழிகள், நல்லதொரு கருத்துகள், பொருளாதாரம், அரசியல், வாழ்க்கையை வாழ்வது எப்படி?, சிறு உதவிகளையும் மறக்காதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நூற்றுக்கணக்கான கருத்துகள் நூலில் விரவிக் கிடக்கின்றன.
Advertisement
'ஜன கண மன' பாடலின் தமிழாக்கம், விதுர நீதியின் முக்கிய கருத்துகள், சாணக்கியன் சொன்னவை போன்றவற்றை படிக்கும்போதே வியக்க வைக்கின்றன. நன்றி மறந்தால் என்னாவோம், தவறு செய்தால் ஆண்டுகள் பல கடந்தாலும் தண்டனை பெறுவோம், ஏய்த்துப் பிழைத்தால் எதிர்காலத்தில் அனுபவிப்போம் உள்ளிட்ட கருத்துகள் நல்ல சிந்தனையுடன், நாம் வாழ்வதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது.
மாணவர்கள், இளையத் தலைமுறையினர் பல நூல்களைப் படித்து அறிய வேண்டியவற்றை ஒற்றை நூலில் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர். இது நினைவலைகள் அல்ல; நல்ல விஷயங்களுடன் வாழ வைக்கும் எண்ணத்தை உண்டாக்கும் அலை என்றே கூறலாம்.
ஜெமினி சினிமாவில் நூலாசிரியர் பணிபுரிந்தபோது, 'பார்க்க, படிக்க, பாதுகாக்க' என்ற விளம்பர வார்த்தைகளை உருவாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் எழுத்தின்படியே இந்த நூலும் பாதுகாக்கப்பட வேண்டியதுதான்!