இழப்பீடு வழங்காத 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி
பெரம்பலூரில், விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத இரண்டு அரசுப் பேருந்துகள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
பெரம்பலூரில், விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத இரண்டு அரசுப் பேருந்துகள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
பெரம்பலூர் அருகே உள்ள அன்னமங்கலம் கிராமம் கோவில்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முத்து (46). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி சேலத்தில் இருந்து பெரம்பலூர் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது, கோனேரிப்பாளையம் நிறுத்தம் அருகே பேருந்தில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், முத்து மனைவி மாரியம்மாள் மற்றும் அவரது மகன்கள் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி, பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த முத்துவின் குடும்பத்தினருக்கு ரூ. 3.91 லட்சம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் வட்டியுடன் ரூ. 4 லட்சத்து 73 ஆயிரத்து 309 வழங்க வேண்டும் எனவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் மாவட்ட நீதிபதி ராமசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, சேலத்தில் இருந்து பெரம்பலூர் வழியாக திருச்சி சென்ற அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதேபோல, பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜூ (45). இவர் அரசு விரைவுப் பேருந்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி பயணம் செய்த போது சாலை விபத்தில் உயிரிழந்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட ராஜூ மனைவி அமராவதி மற்றும் அவரது குடும்பத்தினர் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அண்மையில் விசாரித்த நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த ராஜூ குடும்பத்தினருக்கு, ரூ. 5.20 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகத்தினர் உரிய காலத்தில் இழப்பீட்டை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ. 6.59 லட்சம் வழங்கவும், அரசு விரைவு பேருந்தை ஜப்தி செய்யவும் நீதிபதி ராமசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, சென்னையில் இருந்து பெரம்பலூர் வழியாக சென்ற அரசு விரைவு பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.