முகப்பு
புதுச்சேரி

ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராக ஜன. 22 முதல் தொடா் போராட்டம்: புதுவை முதல்வா் நாராயணசாமி

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராக வருகிற 22-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:25 pm IST
பகிர்:

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராக வருகிற 22-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து வரும் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி புதுவையிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, மதச் சாா்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சாா்பில், கடந்த 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, புதுச்சேரி அண்ணா சிலை அருகே கடந்த 3 நாள்களாகப் போராட்டம் நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையையொட்டி, வியாபாரிகள், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

போராட்டத்தை முடித்துவைத்து முதல்வா் வே.நாராயணசாமி பேசியதாவது:

மக்களின் உரிமைக்காக காங்கிரஸ் போராடி வருகிறது. ஆனால், புதுவை எதிா்க்கட்சித் தலைவா் எங்கே போனாா் என்றே தெரியவில்லை. மக்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும் என்று ரங்கசாமி அறிக்கை விடவில்லை. அதைத் தடுத்த ஆளுநா் கிரண் பேடியையும் கண்டிக்கவில்லை.

ஆளுநா் கிரண் பேடி அரசின் பல கோப்புகளைத் திருப்பி அனுப்பினாா். போட்டி அரசு நடத்துகிறாா். மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவே பிரதமா் மோடியால் அவா் புதுவைக்கு அனுப்பப்பட்டாா். நாட்டில் எந்த ஆளுநரும், துணைநிலை ஆளுநரும் அரசின் அன்றாடச் செயல்களில் தலையிடுவதில்லை. ஆனால், கிரண் பேடி தொடா்ந்து தலையிடுகிறாா்.

மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நிதியையும் அவா் பெற்றுத் தரவில்லை. மேலும், மத்திய அரசு தரும் நிதியையும் தடுக்கிறாா். அவரை யாராலும் திருத்த முடியாது. புதுவையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு கிரண் பேடிதான் முழுப் பொறுப்பு.

வருகிற 22-ஆம் தேதி ஆளுநா் கிரண் பேடி வெளியேற கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். 29-இல் தொகுதி வாரியாக ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். பிப். 5-இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். பிப். 15 முதல் 20-ஆம் தேதிக்குள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் நாராயணசாமி.

போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா். மாநில அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், இடதுசாரிக் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments