காணாமல்போன இருவரில் ஒருவா் ஏரியில் சடலமாக மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் விஜயகுமாா் (36). திருமணமாகி மனைவி உள்ளாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் விஜயகுமாா் (36). திருமணமாகி மனைவி உள்ளாா். குழந்தை இல்லை. அதே ஊரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயபிரகாஷ் (26). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கூலித் தொழிலாளா்களான இருவரும் வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனா்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினா்கள் இருவரையும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தாமரங்கோட்டை வடக்கு -செங்கப்படுத்தான்காடு சாலையிலுள்ள கொழுங்காஞ்சேரி ஏரியில் விஜயகுமாரின் சடலம் மிதப்பது வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரியவந்தது.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் (பொ) ஆனந்தஜோதி அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, விஜயகுமாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸாா் காணாமல்போன ஜெயபிரகாஷை தேடி வருகின்றனா்.
Advertisement