முகப்பு
ராமநாதபுரம்

கடையை உரிமையாளர்களிடம் ஒப்படைக்காதவரின் கடையிலிருந்த பொருள்கள் ஏலம்

கடைக்கு வாடகை கொடுக்காமலும், கடையை உரிமையாளர்களிடமும் ஒப்படைக்காமலும் இருந்தவரின் கடையிலுள்ள

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:40 am IST
பகிர்:

கடைக்கு வாடகை கொடுக்காமலும், கடையை உரிமையாளர்களிடமும் ஒப்படைக்காமலும் இருந்தவரின் கடையிலுள்ள பொருள்களை ராமநாதபுரம் நீதிமன்ற உத்தரவின்படி, புதன்கிழமை நீதிமன்ற ஊழியர்கள் ரூ. 52 ஆயிரத்துக்கு ஏலம் விட்டு அத்தொகையினை நீதிமன்றத்தில் இட்டுவைப்பு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தெற்கு தெருவைச் சேர்ந்த எஸ்.எம். காஜா முகைதீன், எஸ்.எம்.எம். பந்தே நிவாஸ். இவர்கள் இருவருக்கும் சொந்தமான கடை ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் எதிர்புறத்தில் உள்ளது. இக்கடையில் ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்த நாராயணசாமியும், அவரது மகன் காசிநாததுரையும் சேர்ந்து செல்போன் பழுது பார்க்கும் நிறுவனம் நடத்தி வந்தனராம்.

    கடைக்கு கடந்த 10 வருடங்களாக வாடகை கொடுக்காமல் இருந்து வந்தனராம். மேலும் கடையை காலி செய்ய பலமுறை சொல்லியும், கடையை காலி செய்யாமலும் இருந்து வந்துள்ளனர்.

Advertisement

Advertisement

       இதனால் கடை உரிமையாளர்கள் இருவரும் ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், வீட்டு வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம் மூலம் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடையின் உள்ளே இருக்கிற பொருள்களை எடுத்துக் கொண்டு கடையை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நாராயணசாமியும், அவரது மகன் காசிநாததுரையும் செயல்படுத்தாததால், கடையின் உரிமையாளர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிமன்றஉத்தரவை நிறைவேற்றக் கோரும் மனுவைத் தாக்கல் செய்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி கௌதமன், கடைக்குள் இருக்கும் அசையும் சொத்துக்கள் அனைத்தையும் ஏலம் விட்டு அத்தொகையினை நீதிமன்றத்தில் இட்டுவைப்பு செய்யுமாறு உத்தரவிட்டார்.

   நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் உரிமையியல் நீதிமன்ற கண்காணிப்பாளர் வி. சாந்தி, அமீனாக்கள் வி. அமுதா, பெரியசாமி, ஆனந்தராஜ் மற்றும் நீதிமன்ற ஊழியர் குழுவினர் கடையில் இருந்த அசையும் சொத்துக்களை புதன்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் விட்டனர்.

    மேசை, நாற்காலி, கணினி உள்ளிட்ட 28 வகையான பொருள்களை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைத்த தொகை ரூ. 52 ஆயிரத்தை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இட்டு வைப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.