முகப்பு
கட்டுரைகள்

திருநீறு அணிந்து காட்சிதரும் பெருமாள்!

சைவ-வைணவ ஒற்றுமை கொண்ட திருத்தலம்..

லோகநாதப் பெருமாள்
பகிர்:

கிருஷ்ண பக்தியில் மிகச் சிறந்தவர் வசிஷ்டர். ஒருமுறை அவர் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் வெண்ணையில் கிருஷ்ணர் விக்கிரகத்தைச் செய்து அதனை தனது பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார்.

இந்த பக்தியைக் கண்ட கண்ணன் சிறு பாலகன் வடிவம் கொண்டு அந்த வெண்ணையில் செய்த விக்ரகத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு விழுங்கியும் விட்டான். இதனைக் கண்ட வசிஷ்டர் அவனைத் துரத்திச் சென்றார். இது நடந்த இடம் "கிருஷ்ண ஆரண்யம்" எனப் புராணங்களில் வரும் தற்போதைய "திருக்கண்ணங்குடி" ஆகும். அங்குள்ள மகிழ மரத்தடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள்.

வசிஷ்டரால் விரட்டப்பட்ட கண்ணன் இங்கு வந்தான். கண்ணன் வந்ததை தம் ஞானதிருஷ்டியால் அறிந்த ரிஷிகள் தமது பாசக் கயிற்றால் கட்டிப் போட்டனர். இவர்கள் பக்திக்குக் கட்டுப்பட்டவனாகக் கண்ணன் இவர்களிடம் "வசிஷ்டன் என்னைத் துரத்திப் பிடிக்க வருகிறான், அதற்குள் நீங்கள் உங்களுக்கு விரும்பியதைக் கேட்டுப் பெறுங்கள்" எனக் கூறுகிறார். அதற்கு அவர்கள் கண்ணா நீ எங்களுக்குத் தரிசனம் தந்தது போல் இங்கு வந்து நிற்கும் அடியார்களுக்குத் தரிசனம் தர வேண்டும் என வேண்டினர். கண்ணனும் அங்கேயே நிற்க அதற்குள் வசிஷ்டர் அங்கு வந்து கண்ணனின் திருவடிகளை அவன் ஓடாதபடி இறுகப் பிடித்தவுடன், உடனே அங்குக் கோபுரங்களும், விமானங்களும் உருவாகி கண்ணன் அங்கே நிற்கலானான். அங்கேயே குடிகொண்டதால் இந்த இடத்திற்கு திருக்கண்ணங்குடி எனப் பெயர் வரலாயிற்று.

இத்திருத்தலத்தின் பெருமை

பெருமாளின் 108 திருத்தலங்களில் இது 18வது தலம். இத்திருத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது "திருநீறணி திருவிழா" ஆகும். இந்த விழாவின்போது பெருமாள் திருநீறணிந்து கொள்கிறார். இந்த விழாவானது 3 3/4 நாழிகை தான் நடைபெறும். அதாவது 2 1/2 நாழிகை 1 மணி நேரம் ஆகும். 3 3/4 நாழிகை என்பது 1 1/2 மணி நேரம் மட்டுமே. இந்த விழாவின்போது அனைவரும் திருநீறு அணிந்து வருவார்களாம். சைவ , வைணவ ஒற்றுமைக்காக உபரிசரவசு என்ற மன்னனால் துவக்கப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகிறது.

உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கும் இத்தல இறைவனை பிரம்மா, கௌதமர், வசிஷ்டர், பிருகு, உபரிசரவசு, திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் போன்றவர்கள் தரிசித்துள்ளனர்.

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களான திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி ஆகும். இங்குள்ள பெருமாள் லோகநாத பெருமாள் இவரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம். தாயார் லோகநாயகி ஆவார். எல்லா திவ்ய தேசத்திலும் கருடன் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் உள்ள கருடாழ்வார் தமது கைகளைக் கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் இருப்பது போல் இருப்பார்.

குழந்தைப் பாக்கியம் வேண்டி இத்தலத்தில் வந்து வேண்டியவர்களுக்கு அருள்செய்யும் இறைவனாக இங்கு உள்ளார். பிரார்த்தனை நிறைவேறியதும் இந்த கண்ணனுக்கு பால் பாயசம் செய்து நிவேதனம் செய்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு எவ்வளவோ கோயில்கள் இருப்பினும், இங்கு வந்து வேண்டியவர்களுக்கு நிச்சயம் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது அங்கு வந்து வணங்குவோரின் எண்ணிக்கையே சாட்சி.

முகவரி

அருள்மிகு லோகநாதப் பெருமாள் திருக்கோயில்,

திருக்கண்ணங்குடி, ஆழியூர் வழி, (சிக்கல் அருகே),

கீவளூர் அஞ்சல், நாகை வட்டம் - 611104.

"ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல... பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்..."

தொடர்புக்கு : வாட்ஸாப் 98407 17857 - 91502 75369

முழு கட்டுரையைப் படிக்க →