திருமலையில் விசாக சாரதா பீடாதிபதி வழிபாடு
திருமலையில் விசாக சாரதா பீடத்தின் பீடாதிபதி சொரூபானந்தேந்திர சுவாமிகள், செவ்வாய்க்கிழமை
திருமலையில் விசாக சாரதா பீடத்தின் பீடாதிபதி சொரூபானந்தேந்திர சுவாமிகள், செவ்வாய்க்கிழமை ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தனது சீடர்களுடன் சுவாமி தரிசனம் செய்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருப்பதி தேவஸ்தானத்துக்கும், ஆந்திர அறநிலையத் துறைக்கும் அர்ச்சகர்களின் பணி மற்றும் ஓய்வு உள்ளிட்டவை தொடர்பாக முடிவெடுக்க உரிமையில்லை. அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயதை தேவஸ்தானம் நிர்ணயித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது.
அர்ச்சகர்களின் விஷயத்தில் தேவஸ்தானம் செய்த தவறை ஹைதராபாத் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது பாராட்டுக்குரியது. அதேபோல், மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்திலும் அர்ச்சகர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறோம்.
அர்ச்சகர் பணி என்பது அரசு வேலையில்லை. அது ஒரு வம்ச பாரம்பரிய சேவை. அர்ச்சகர்களின் வாழ்வில் அனைத்து நலன்களும் கிடைக்க ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன்.
தேவஸ்தானத்தின் நிதியை வீணடிக்கும் வகையில் பல்வேறு நகரங்களில் தேவஸ்தானம் ஏழுமலையான் கோயிலைக் கட்டி வருகிறது. அதற்கு பதிலாக, மதமாற்றம் நடைபெற்று வரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோயில் அல்லது மருத்துவமனைகளைக் கட்ட வேண்டும்.
தேவஸ்தானம் செய்யும் தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவதால் ஆண்டுதோறும் நடைபெறும் பீடாதிபதிகள் கூட்டத்தை அதிகாரிகள் நடத்துவதில்லை. இதை ஆந்திர அரசும் கண்டுகொள்வதில்லை என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.