முகப்பு
செய்திகள்

அத்தி வரதர் வைபவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள்: பக்தர்கள் யாரும் நம்பவேண்டாம்!

காஞ்சிபுரம் வரதர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் நிகழவுள்ள அத்திவரதர் வைபவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்..

Updated On : 11 ஜூன் 2018, 12:55 pm IST
பகிர்:

காஞ்சிபுரம் வரதர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் நிகழவுள்ள அத்திவரதர் வைபவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல் தவறானது என்று கோயில் நிர்வாக அறங்காவலர் எம். விஜயன் தெரிவித்துள்ளார். 

புராதன ஆலயங்களுக்குப் பெயர்பெற்ற ஊர் காஞ்சிபுரம். வரதராஜ பெருமாள் ஆலயம் அற்புதங்கள் பல நிறைந்த தலமாக கருதப்படுகிறது. ஆலயத்தில் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. 

தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபத்தில் அனந்தசரஸ் என்ற திருக்குளத்திற்குள் அத்திவரதர் உள்ளார். இவர் அத்தி மரத்தால் ஆனவர். இந்தச் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம். இறுதியாகக் கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர் சிலை பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

இதுகுறித்து கோயில் நிர்வாக அறங்காவலர் கூறுகையில், 

தற்போது 40 ஆண்டுகளுக்குப் பின் வரும் 2019-ல் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது. இந்த வைபவம் எந்த நாளில் துவங்க உள்ளது என்பதைக் குறித்து இதுவரை கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படவில்லை. 

ஆனால், சமூக வலைத்தளங்களில் 2019 ஜூலை 15-ல் அத்திவரதர் தெப்பக்குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெறவுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. அத்தி வரதர் வைபவம் குறித்து கோயில் நிர்வாகம் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது 2019-ல் நடைபெற உள்ள வைகாசி பிரம்மோற்சவத்திற்கு பின் தான் அத்திவரதர் வைபவம் நடைபெறும் நாள் குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கோயில் நிர்வாக அறங்காவலர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.