திருமலையில் முக்கிய பிரமுகர்களுக்காக 921 அறைகள் ஒதுக்கீடு
திருவேங்கடமுடையான் எழுந்தருளியுள்ள திருமலையில் முக்கிய பிரமுகர்களுக்கு (விஐபி-க்கள்) முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவர்களுக்காக 921 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திருவேங்கடமுடையான் எழுந்தருளியுள்ள திருமலையில் முக்கிய பிரமுகர்களுக்கு (விஐபி-க்கள்) முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவர்களுக்காக 921 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருமலைக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் தங்குவதற்காக திருமலையில், 7,397 அறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 921 அறைகள் வி.ஐ.பி.க்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 200 அறைகள் தேவஸ்தான ஊழியர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
மேலும், 609 அறைகளை தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊடகங்களின் அலுவலகங்களுக்காக, தேவஸ்தானம் நிரந்தரமாக ஒதுக்கி உள்ளது. திருமலையில் மொத்தம் 7,397 அறைகள் இருந்தாலும் அவற்றில் பக்தர்களுக்காக 5,667 அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 1,705 அறைகள் இணையதள முன்பதிவு மூலம் வழங்கப்படுகின்றன. 250 அறைகள் நன்கொடையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றையும் தவிர்த்தால், திருமலைக்கு வரும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு 3,700 அறைகள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, அந்த மாதத்தில் 8,881 அறைகள் பரிந்துரைக் கடிதங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் அறங்காவலர் குழுத் தலைவரின் பரிந்துரையின் கீழ் 2,053, அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பரிந்துரைப்படி 1,993, அமைச்சர்கள் - 557, எம்.பிக்கள் - 639, எம்எல்ஏக்கள் - 864, எம்எல்சி-க்கள் - 486, ஐஏஎஸ் அதிகாரிகள் - 297, ஐபிஎஸ் அதிகாரிகள் -37, ஊடகங்கள் - 802, காவல்துறை அதிகாரிகள் - 735, நீதித்துறை - 133, ரயில்வே துறை - 28, வரித்துறை - 62, ஸ்விம்ஸ் மருத்துவமனை - 17, திருப்பதி நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் - 32 என மொத்தம் 8,881 அறைகள் ஒதுக்கப்பட்டன. சிலர் ஒரு நாள் என்றால் மற்றும் சிலர் 2 நாள்கள் என, 13 ஆயிரத்து 809 நாள்களுக்கு பரிந்துரைக் கடிதம் பெற்றவர்கள் அறையில் தங்கியுள்ளனர்.
மாநில அமைச்சர்களுக்கு தினசரி 3 அறைகள், எம்எல்ஏ, எம்.பி., எம்எல்சி பரிந்துரைக் கடிதங்களுக்கு ஒரு அறை மட்டும் வழங்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.