மஹாளய அமாவாசை: ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்கினி தீர்த்தக் கரையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது
புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்கினி தீர்த்தக் கரையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு திங்கள்கிழமை தர்ப்பணம் செய்தனர்.
திங்கள்கிழமை புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி, முதல் நாள் நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராமேசுவரம் வந்தனர். அதிகாலையில் அக்கினி தீர்த்தக் கரையில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
பின்னர், பொதுமக்கள் கோயிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சிவ வழிபாடு நடத்தினர்.முன்னதாக, ராமநாதசுவாமி கோயிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் அக்கினி தீர்த்தக் கரைக்கு எழுந்தருளிய ராமர், சீதை, லெட்சுமணன், அனுமனுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரியில்... மஹாளய அமாவாசையான திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமானோர் புனித நீராடினர். பிறகு, கடற்கரையில் வேதவிற்பனர்கள் மூலம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, அந்த பொருள்களை தலையில் சுமந்துச் சென்று கடலில் கரைத்தனர். மேலும், கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகர் கோயில், பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, பகவதியம்மன் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு வைரக்கிரீடம், வைர மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
பாபநாசத்தில்...: புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அதற்கான முழுப் பயனையும் பெறலாம் என்பது நம்பிக்கை. இதையடுத்து, பாபநாசம் தாமிரவருணியில் ஆயிரக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பனம் அளித்து வழிபட்டனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு, பாபநாசம் சிவன் கோயிலிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.
வேதாரண்யத்தில்... வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் ஆதிசேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை, அர்த்ததோயம், மகோதயம், மாசிமகம் ஆகிய நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அந்த வகையில், புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை நாளான திங்கள்கிழமை, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் அதிகாலையிலிருந்து புனித நீராடல் செய்தனர்.
கோடியக்கரை முழுக்குத்துறையில் நீராடியவர்கள், தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் (நீர்ச்சடங்கு) செய்தனர். பின்னர், அங்குள்ள சித்தர்கோயில், ராமர் பாதம் உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனர்.