திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி கிருத்திகை பூஜை
மாசி கிருத்திகையையொட்டி திருப்போரூர் கந்தசாமி கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாசி கிருத்திகையையொட்டி திருப்போரூர் கந்தசாமி கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருப்போரூர் முருகன் கோயிலில் தற்போது 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாசி கிருத்திகையையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடைபெற்றது. காலையில், முருகர், வள்ளி தெய்வானை உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடிகளை எடுத்து வந்தனர். பலர் அலகு குத்தி வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மாலையில், முருகர் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் மயில்வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு வந்து தங்கியிருந்த பக்தர்களுக்காக ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றி, அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.