அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது தொடர்பாக...
அவிநாசி: கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை(ஏப். 21) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகியது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாக கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு தேர்த் திருவிழா வேத பாராயணம், பஞ்ச வாத்தியம் முழங்க கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
Advertisement
கொடியேற்றத்தை ஒட்டி விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
இதையடுத்து, பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுலவேதாகம் பாடசாலை முதல்வர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவம் தலைமையில் வேத பாடசாலை மாணவர்களுடான குழுவினர் வேதபாராயணம் நிகழ்த்தினர். இதில், அவிநாசி வாகீசர் மாடாலாயம் காமாட்சிதாச சுவாமி, அறங்காவலர்கள் உள்பட எராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து 22-ஆம் தேதி மாலை சூரிய, சந்தர மண்டல காட்சி, 23-ஆம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்னபச்சி வாகனக் காட்சிகள், 24-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு நடைபெற உள்ளது. 25-ஆம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், கரிவரதராஜப் பெருமாள் கோயில் கொடியேற்றம் ஆகியவை நடைபெற உள்ளன.
26-ஆம் தேதி இரவு கற்பகவிருட்சம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளன. 27-ஆம் தேதி காலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 28-ஆம் தேதி காலை அவிநாசியப்பர் திருத்தேர் வடம் பிடித்தல் தேரோட்டம், வடக்கு ரத வீதியில் தேர் நிறுத்தப்படும். 29-ஆம் தேதி காலை 8 மணிக்கு அவிநாசியப்பர் திருத்தேர் வடம் பிடித்தல், தேர் நிலை சேறுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 30-ஆம் தேதி காலை 8 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜப் பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மே 1-ஆம் தேதி பரிவேட்டை, 2-ஆம் தேதி இரவு தெப்பத் தேர் உற்சவம், 3-ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 4-ஆம் தேதி மஞ்சள் நீர், இரவு மயில் வாகனக் காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.