திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஏழூர் சப்தஸ்தான புறப்பாடு விழா!
ஐயாறப்பர் கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி காட்சியளித்தது பற்றி..
ஐயாறப்பர் ஆலயத்தில் சப்தஸ்தான விழா தொடங்கிய நிலையில், அறம் வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி காட்சியளித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் ஆலயம் அமைந்துள்ளது. பெரிய கோயில் கட்டுவதற்கு முன்பே உருவான இந்த ஆலயம் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயம் தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இதேபோல் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா மற்றும் தன்னைத்தான் பூஜித்தல் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஏழூர் பல்லாக்கு என்கிற சப்தஸ்தான இன்று தொடங்கியது.
Advertisement
அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கண்ணாடி பல்லாக்கிலும் - சுயசாம்பிகை உடனுறை நந்திகேஸ்வரர் வெட்டிவேர் பல்லாக்கிலும் ஆலயத்திலிருந்து புறப்பட்டனர். தொடர்ந்து திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பந்துருத்தி, தில்லை ஸ்தானம் ஆகிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள சுவாமிகளுடன் ஏழூர் பல்லாக்கு எழுந்தருளி காவிரி ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
சுவாமி புறப்பாடை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயாறப்பரை வழிபட்டன.