வழக்குகளில் மட்டுமே கவனம் செலுத்தும் தமிழக அரசு மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழக அரசு வளர்ச்சிப் பணிகளைவிட வழக்குகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு வளர்ச்சிப் பணிகளைவிட வழக்குகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
சேலம் மாவட்ட திமுக சார்பில் 2-ஆம் கட்ட தேர்தல் நிதியளிப்பு, பொதுக்கூட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியது:
Advertisement
மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதற்கான முன்னேற்பாடாகத்தான தேர்தல் நிதி திரட்டும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் தேர்தல் நிதியாக ரூ.4 கோடி பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாகியும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. திமுக ஆட்சியில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு, தற்போது 18 மணி நேரமாக உயர்ந்து விட்டது.
ஓராண்டில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்ற அரசின் வாக்குறுதியும் அப்படியே உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் குற்ற வழக்குகளும், சட்ட ஒழுங்கு பிரச்னையும் அதிரித்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு கவலைப்படாமல், எதிர்க்கட்சியினர் மீது அவதூறு வழக்குகளைப் போடுவதில்தான் ஆர்வம் காட்டி வருகிறது.
திமுகவினரை பழிவாங்குவதற்காக வழக்குகள் போடுவதைக் கைவிட்டு, தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். எனினும், எந்த வழக்கையும் சந்திக்க திமுக தயாராக உள்ளது என்றார் அவர்.
கூட்டத்துக்கு சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, நாமக்கல் மக்களவை உறுப்பினர் செ.காந்திசெல்வன், திமுக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கட்சியின் தாரமங்கலம் ஒன்றியச் செயலாளர் எஸ்.அம்மாசி வரவேற்றார்.