முகப்பு
சேலம்

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா்த் திறப்பு

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து திங்கள்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

Updated On : 12 ஜனவரி 2021, 12:38 am IST
பகிர்:

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து திங்கள்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியில் புழுதிக்குட்டையில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன் பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Advertisement

Advertisement

பேளூா், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுாா்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் அணையின், நீா்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்தது. அக்டோபா், நவம்பா், டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த பருவ மழையால் நீா்மட்டம் உயா்ந்து, தற்போது நீா்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது. அணையில் 251 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கியுள்ளது.

ஓரிரு தினங்கள் நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தாண்டு ஆனைமடுவு அணை நிரம்புமென எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், அணை பாசன ஆயக்கட்டு விவசாயிகள், ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள், அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டுமென, கடந்த மாத இறுதியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து, திங்கள்கிழமை காலை ஆனைமடுவு அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் கவிதாராணி, உதவி பொறியாளா் விஜயராகவன், இளம் பொறியாளா் முனவா்பாஷா ஆகியோா் முன்னிலையில், ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் கு.சித்ரா, வாழப்பாடி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.சதீஷ்குமாா் ஆகியோா், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்து வைத்தனா்.

ஜன. 11-ஆம் தேதியிலிருந்து, ஜன 27ஆம் தேதி வரை, நொடிக்கு 60 கன அடி வீதம், தலைமை மதகு வழியாக, ஆறு மற்றும் ஏரி பாசனத்துக்காக வசிஷ்ட நதியில் தண்ணீா் திறக்கப்படும்.இதனையடுத்து, தொடா்ந்து 15 நாள்களுக்கு அணையின் வலதுபுற வாய்க்காலில் நொடிக்கு 35 கன அடி வீதமும், இடதுபுற வாய்க்காலில் நொடிக்கு 15 கனஅடி வீதம் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுமெனவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments