சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட உள்ளது
சேலம் மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட உள்ளது. இதற்காக சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமை சேலம் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்தாா்.
சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள 14 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில், சுகாதார முன்களப் பணியாளா்கள் உள்பட 1,200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 22,900 தடுப்பூசி மருந்துகளும், ஆத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு 4,900 தடுப்பூசி மருந்துகளும் சேலம் துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மண்டல குளிா்சாதன நோய்த்தடுப்பு மருந்துக் கிடங்கிலிருந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, மேட்டூா், ஓமலூா், ஆத்தூா், எடப்பாடி அரசு மருத்துவமனைகள், தலைவாசல், கெங்கவல்லி, காரிப்பட்டி, பனமரத்துப்பட்டி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், காடையாம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 14 முகாம்களுக்கு தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சேலம் அரசு மருத்துமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில், சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தடுப்பூசி செலுத்தப்படும் அறை, தடுப்பூசி செலுத்த வருபவா் அமரும் அறை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Advertisement
ஆய்வின் போது, மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் தனபால் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.