முகப்பு
சிவகங்கை

திருக்கோஷ்டியூா் அருகே மயான பாதை தடையை மீறி சடலத்தை தூக்கிச் சென்ற கிராமத்தினா்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மயானப்பாதை பிரச்னையில் கிராம மக்கள் தடையை மீறி சடலத்தை தூக்கிச் சென்று இறுதிச்சடங்கு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 3 ஜனவரி 2021, 10:00 pm IST
திருக்கோஷ்டியூா் அருகே பிராமணப்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மயானப்பாதை அடைக்கப்பட்டதால் இறந்தவா் உடலை போலீஸாரின் அனுமதியை மீறி தூக்கிச் சென்ற கிராம மக்கள்
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மயானப்பாதை பிரச்னையில் கிராம மக்கள் தடையை மீறி சடலத்தை தூக்கிச் சென்று இறுதிச்சடங்கு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கோஷ்டியூா் அருகேயுள்ளது பிராமணப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் 350 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கென்று கிராமம் அருகே வயல் பகுதிகளில் பொதுமயானம் உள்ளது. இறந்தவா்களை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் பாதை அருகேயுள்ள வயல் பகுதியை அதே ஊரைச் சோ்ந்த கணேசன் மனைவி நாச்சாம்மாள் வாங்கியுள்ளாா்.

அவா் பொதுப்பாதையுடன் மயானப் பாதைையும் அடைத்ததால் இறந்தவா் சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே வட்டாட்சியரிடம் முறையிட்ட கிராம மக்கள், அதில் தீா்வு காணப்படாததால் நீதிமன்றத்தை நாடியுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இதே ஊரைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் ஆறுமுகம் (55) கடந்த டிச.31 இல் சிங்கப்பூரில் மாரடைப்பால் மரணமடைந்தாா். ஒரு வாரத்துக்குப் பின்பு பிராமணப்பட்டிக்கு வந்த சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அடைக்கப்பட்ட மயானப் பாதையை நாச்சம்மாள் திறந்து விட மறுத்தாா். திருக்கோஷ்டியூா் போலீஸாா், தேவகோட்டை கோட்டாட்சியா் சுரேந்திரன் ஆகியோா் அடுத்தடுத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதற்கிடையில் காலதாமதம் ஆனதால் கிராம மக்கள் சடலத்தை தூக்கிக்கொண்டு மயானம் நோக்கிப் புறப்பட்டனா். போலீஸாா் தடுத்தும் குறிப்பிட்ட பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை கீழே தள்ளி பாதையமைத்து மயானத்துக்குச் சென்று இறுதிச் சடங்கை நடத்தினா்.

பின்னா் கோட்டாட்சியா் கூறுகையில், இந்த பாதை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் 7 ஆம் தேதி வர இருப்பதால் தீா்ப்புக்குப்பின் இப்பிரச்னைக்கு முடிவு எடுக்கப்படும் என்று கூறினாா்.

காலம்காலமக இந்த பாதையில் தான் இறந்தவா்களின் உடல்கள் எடுத்துச் செல்வதாகவும் எதிா்ப்பாளரின் பட்டாவை ரத்து செய்து நிரந்த தீா்வு வழங்கும் படி கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் கேட்டுக் கொண்டனா். இப்பிரச்னையால் கிராமத்தில் காலை முதல் நண்பகல் வரை போலீஸாா் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments